3 நாள் வெளிநாட்டு பயணத்தில் 25 நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

3 நாள் வெளிநாட்டு பயணத்தில் 25 நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு
Updated on
1 min read

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தனது 3 நாள் வெளிநாட்டுப் பயணத்தில் 8 உலகத் தலைவர்களை சந்திப்பது உட்பட 25 நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

பிரதமர் மோடி ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். மேலும் ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளை ஒன்றிணைத்துள்ள உக்ரைன் நெருக்கடி காலத்தில் அவர் பயணம் மேற்கொள்கிறார்.

முதலில் ஜெர்மனி செல்லும் பிரதமர், பிறகு அங்கிருந்து டென்மார்க் செல்கிறார். டென்மார்க் பயணத்தை முடித்துக் கொண்டு இறுதியாக அவர் பாரீஸ்வருகிறார். 2-ம் தேதி இரவு ஜெர்மனியிலும் 3-ம் தேதி இரவு டென்மார்க் கிலும் அவர் தங்குகிறார்.

மூன்று நாடுகளிலும் 65 மணி நேரம் செலவிடும் பிரதமர், சந்திப்பு,கலந்துரையாடல், பேச்சுவார்த்தை என 25 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 7 நாடுகளின் 8 தலைவர்களை அவர் சந்திப்பதுடன் உலக தொழில் தலைவர்கள் 50 பேருடன் கலந்துரையாட உள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர்களையும் அவர் சந்திக்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in