சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு: பாஜக பெண் நிர்வாகி திவ்யா கைது

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு: பாஜக பெண் நிர்வாகி திவ்யா கைது
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த அக்டோ‍பரில் 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் 54 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில்முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் குறித்து சிஐடி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் க‌டந்த வாரம் தேர்வில் 2-ம் இடம் பிடித்த சேத்தன், 7-ம் இடம் பிடித்த வீரேஷ், 9-ம் இடம் பிடித்த பிரவீன்குமார் உட்பட 12 பேர், 10 போலீஸார் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் குல்பர்கா மாவட்டத்தில் உள்ள பாஜக பிரமுகர் திவ்யாவுக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீஸார் திவ்யா, அவரது கணவர் ராஜேஷ் ஆகியோரை தேடி வந்தனர். இதனிடையே காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பிரியங்க் கார்கே, பாஜக அரசு திவ்யாவை காப்பாற்ற முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டினார். இந்நிலையில் புனேவில் தலைமறைவாக இருந்த திவ்யா, ராஜேஷ் ஆகிய இருவரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பிரியங்க் கார்கே கூறுகையில், ‘’ சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான தேர்வில் ரூ.80 லட்சம் வரை அமைச்சர், அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளுக்கு கமிஷன் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பேற்று கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா பதவி விலக வேண்டும்’’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in