Published : 06 May 2016 10:05 AM
Last Updated : 06 May 2016 10:05 AM
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் அனைத்து வாதங்களையும் வரும் 13-ம் தேதிக்குள் முடித்து கொள்ளுமாறு கர்நாடக அரசு மற்றும் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு விசாரணை நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கர்நாடக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா தனது இறுதி தொகுப்பு வாதத்தை முன்வைத்தார்.
“ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் தங்களது அனைத்து பண பரிவர்த்தனை களையும் வங்கிகள் மூலமாகவும், காசோலைகள் மூலமாகவும் மேற் கொண்டுள்ளனர். சில குறிப்பிட்ட செலவுகளுக்கு மட்டுமே ரொக்க மாக பணத்தை செலவு செய்துள்ள னர். இவ்வாறு செய்யப்பட்ட வரவு செலவை வருமான வரித்துறை யில் கணக்கு காட்டி, அவை சட்டத் திற்கு உட்பட்டு நடைபெற்ற பண பரிமாற்றமாக சித்தரித்துள்ளனர்.
ஜெயலலிதா உள்ளிட்ட நால் வரும் ஏற்கெனவே தொடங்கப்பட்டு செயல்படாத நிறுவனங்களை வாங்கி, அவற்றின் பேரில் பல இடங்களில் சொத்துக்களை வாங்கி யுள்ளனர். சசிகலா உள்ளிட்டோர் ஜெயலலிதாவு க்கு பினாமியாக செயல்பட்டுள்ளனர். ஜெயலலிதா வின் பணத்தில் 32 தனியார் நிறு வனங்களை சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் நிர்வகித் துள்ளனர் என கர்நாடக அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டு வழக்கில் ஏராளமான கணித பிழைகளுட னும், சட்டத்துக்கு புறம்பாகவும், தவறான முன்னுதாரணத்தின் அடிப் படையிலும் உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தீர்ப்பு அளித்துள்ளார்” என அவர் வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி கள், “உங்களது (கர்நாடக அரசு தரப்பு) இறுதி தொகுப்பு வாதத்தை எப்போது நிறைவு செய்வீர்கள்? இன்னும் எத்தனை நாட்கள் வாதிடப் போகிறீர்கள்?'' என கேட்டனர். அதற்கு ஆச்சார்யா, “இவ்வழக்கில் பல்வேறு முக்கிய அம்சங்களை தெரிவிக்க வேண்டி இருப்பதால், வாதிட போதிய கால அவகாசம் வழங்க வேண்டும்'' என்றார்.
அதற்கு நீதிபதிகள், ''கர்நாடக அரசு தரப்பு இறுதி தொகுப்பு வாதத்தை தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் தரப்பும் தங்களது பதில் வாதத்தையும், இறுதி தொகுப்பு வாதத்தையும் வரும் 13-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்'' என அறிவுறுத்தினர்.
அடுத்தகட்ட விசாரணை வரும் 10-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது. உச்ச நீதிமன்றத்துக்கு வரும் 14-ம் தேதியில் இருந்து ஜூன் 29-ம் தேதி வரை கோடை விடுமுறை.
எனவே அனைத்து தரப்பு விசா ரணையும் வரும் 13-ம் தேதிக்கு முன்பாக முடிக்கப்பட்டால், கோடை விடுமுறை காலத்தில் வழக்கின் ஆவணங்களை படிக்க வும், இரு தரப்பு வாதங்களை ஆராயவும், தீர்ப்பு எழுதுவதற்கும் போதிய கால அவகாசம் இருக்கும் என்பதால் இத்தகைய காலக் கெடுவை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT