Published : 24 Apr 2022 05:13 PM
Last Updated : 24 Apr 2022 05:13 PM

'அப்படிச் சொன்னதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை' - ஜாமீனில் வெளிவந்த துறவி பஜ்ரங் முனி பேட்டி 

முஸ்லிம் பெண்களுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட துறவி பஜ்ரங் முனி தாஸ், தனது கருத்துக்காக வருத்தப்படவில்லை, குற்ற உணர்ச்சி இல்லை என்றும், இந்து மதத்தையும், இந்துப் பெண்களையும் பாதுகாக்க எத்தனை முறை வேண்டுமானாலும் சிறை செல்ல தயார் என்றும் கூறினார்.

உ.பி.யின் சீதாபூரில் மஹரிஷி ஸ்ரீ லஷ்மண் தாஸ் உதாஸி ஆசிரமம் உள்ளது. இதன் தலைமை பதவியில் மடாதிபதி மஹந்த் பஜ்ரங் முனி தாஸ் உள்ளார். இவர் கடந்த ஏப்ரல் 2-ல் சீதாபூரில் நடைபெற்ற இந்துக்களின் ஆன்மீக ஊர்வலம் ஒன்றில் கலந்து கொண்டார். வாகனத்தில் ஏகே 47 துப்பாக்கிகள் ஏந்திய போலீஸார் பாதுகாப்பு மஹந்த் பஜ்ரங் முனிக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஊர்வலம் சீதாபூரின் கைராபாத் பகுதியின் மசூதியை கடந்து சென்றது.

அப்போது துறவியான பஜ்ரங் முனி தாஸ் தம் வாகனத்தில் அமர்ந்தபடி "இதை நான் மிகவும் அன்பான வார்த்தைகளால் கூறிக்கொள்ள விரும்புகிறேன், கைராபாத்தில் ஒரு இந்து மதத்தின் பெண்ணாவது கேலி செய்யப்பட்டால், கைராபாத்தின் முஸ்லிம் மருமகள்களை அவர்கள் வீட்டிலிருந்து வெளியே இழுத்து பாலியல் பலாத்காரம் செய்வேன்’’ என முஸ்லிம் பெண்களை மிரட்டும் வகையில் விடுத்தார்.

இந்த மிரட்டலின் வீடியோ காட்சிகள், சமூகவலை தளங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாக, விவகாரம் சர்ச்சையானது. பின்னர் தேசிய மகளிர் ஆணையம், இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக மஹந்த் பஜ்ரங் முனி தாஸ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.

அவர் கைதாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அவர் வெளியிட்ட மன்னிப்பு வீடியோவும் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவருக்கு நேற்று (சனிக்கிழமை) ஜாமீன் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் இன்று (ஏப்.24) காலை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து பேசிய அவர், தனது கருத்துக்காக வருத்தப்படவில்லை என்றும், இந்து மதத்தையும், இந்துப் பெண்களையும் பாதுகாக்க எத்தனை முறை வேண்டுமானாலும் சிறை செல்ல தயார் என்றும் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x