Published : 24 Apr 2022 04:51 AM
Last Updated : 24 Apr 2022 04:51 AM

உலகிலேயே முதல் நாடாக இந்தியாவை மாற்ற இலக்கு: பிரதமரின் லட்சியம் குறித்து அமித் ஷா பேச்சு

பிஹார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் ஜெகதீஷ்பூரில் நேற்று நடைபெற்ற அம்ருத் மகோத்சவ் விழா, சுதந்திரப் போராட்ட வீரர் கன்வர் சிங்கின் பிறந்தநாள் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்குப் பின்னர் ஹெலிகாப்டரில் புறப்பட்ட அமைச்சர் அமித் ஷாவை நோக்கி கையசைக்கும் பாஜக தொண்டர்கள். படம்: பிடிஐ

ஜெகதீஷ்பூர்: நாடு தனது 100வது சுதந்திரத்தை கொண்டாடும்போது, உலகிலேயே முதல் நாடாக இந்தியாவை மாற்ற பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

பிஹார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜெகதீஷ்பூரில் சுதந்திர போராட்ட வீரர் வீர் கன்வர் சிங் கடந்த 1857-ம் ஆண்டு ஏற்படுத்திய கலகத்தின் நினைவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். பா.ஜ.க தொண்டர்கள் 77,000 பேர் கலந்துகொண்டு மூவர்ண கொடியை, 5 நிமிடங்கள் அசைத்து புதிய சாதனை படைத்தனர்.

இதற்கு முன் பாகிஸ்தான் லாகூரில், 56,000 பேர் பங்கேற்று தேசியக் கொடியை அசைத்தது தான் சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

கரோனா தொற்று சமயத்தில், மக்களுக்கு உதவ பிரதமர் மோடி அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது. ஏழைகளுக்கு தடுப்பூசி மற்றும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன.

நாடு தனது 100வது சுதந்திரத்தை கொண்டாடும் போது, உலகிலேயே முதல் நாடாக இந்தியாவை மாற்ற பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார்.

இந்தியாவின் முதல் சுதந்திர போர் என அழைக்கப்பட்ட 1857-ம்ஆண்டு கலகத்தில், ஆர்எஸ்எஸ் நிறுவனர்களில் ஒருவரான சாவர்க்கர் முக்கிய பங்காற்றினார். லாலு பிரசாத் யாதவுக்கு போஸ்டர் வைப்பதை தவிர்ப்பதால் மட்டும், பிஹாரில் காட்டாட்சி நினைவுகளை அழிக்க முடியாது. இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x