Published : 22 Apr 2022 01:15 PM
Last Updated : 22 Apr 2022 01:15 PM

ஹிஜாபுக்கு அனுமதி மறுப்பு: கர்நாடகாவில் பொதுத் தேர்வைப் புறக்கணித்த 2 மாணவிகள்

தேர்வைப் புறக்கணித்துச் செல்லும் மாணவிகள் ஆலியா ஆஸாதி மற்றும் ரேஷம்.

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்திலுள்ள பியு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டதால் பொதுத் தேர்வைப் புறக்கணித்து மாணவிகள் இரண்டுபேர் வீடு திரும்பினர். இவர்கள் இருவரும், கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளை அந்த நிர்வாகங்கள் அனுமதிக்கவில்லை. இந்து மாணவர்களும் காவித் துண்டு அணிந்து பள்ளி கல்லூரிகளுக்கு வந்தனர். அவர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்டத் தடையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம் மாணவிகள் மேல்முறையீடு செய்துள்ளனர்.

கடந்த 28-ம் தேதி தொடங்கிய எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பங்கேற்க கர்நாடக அரசு தடை விதித்தது. இதனால் 1,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் தேர்வைப் புறக்கணித்தனர்.

இந்நிலையில், இன்று (ஏப்.22-ம்) தேதி முதல் "2nd PU" எனப்படும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கின. ஆனால், மாணவிகள் ஆலியா ஆஸாதி மற்றும் ரேஷம் ஆகிய இருவரும் தாங்கள் படிக்கும் உடுப்பியில் உள்ள வித்யோதயா பியு கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்தனர். அப்போது, அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் மற்றும் தேர்வு கண்காணிப்பாளர்களுடன் 45 நிமிடங்கள் வரை சமரச முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக் காட்டி அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் தேர்வைப் புறக்கணித்துச் சென்றனர்.

அன்றே ட்வீட் செய்த ஆலியா... கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த மாணவிகளில் ஒருவரான ஆலியா ஆஸாதி தனது ட்விட்டர் பக்கத்தில், "வரும் ஏப்.22-ம் தேதி முதல் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கவுள்ளன. எங்கள் எதிர்காலம் பாழாகாமல் தடுத்து நிறுத்துவதற்கு கர்நாடக முதல்வருக்கு இன்னும் வாய்ப்பிருக்கிறது. நாங்கள் ஹிஜாப் அணிந்து தேர்வெழுத அனுமதி வழங்க உத்தரவிடலாம். எனவே, இந்த நாட்டின் எதிர்காலம் நாங்கள் என்பதை உணர்ந்து, எங்களது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்" எனப் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x