டெல்லியின் ஜஹங்கீர்புரியில் மீண்டும் பதற்றம்: விசாரணைக்குச் சென்ற போலீஸார் மீது கல்வீச்சு

டெல்லியின் ஜஹங்கீர்புரியில் மீண்டும் பதற்றம்: விசாரணைக்குச் சென்ற போலீஸார் மீது கல்வீச்சு
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லியின் ஜஹங்கீர்புரியில் இன்று மதியம் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இங்கு ராமநவமியில் ஏற்பட்ட கலவரத்தின் குற்றம்சாட்டப்பட்டவரை விசாரிக்கச் சென்ற போலீஸார் மீது கற்கள் வீசப்பட்டுள்ளன.

கடந்த 16-ம் தேதி ராம்நவமியை முன்னிட்டு டெல்லியின் ஜஹங்கீர்புரியில் நடைபெற்ற ஊர்வலம், கலவரமானது. தற்போது அங்கு மத்தியப் பாதுகாப்பு போலீஸார் அமர்த்தப்பட்டு அமைதி ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் 20 பேர் கைதான நிலையில், இவ்வழக்கு டெல்லியின் குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஜஹங்கீர்புரியில் இருந்த பல்வேறு சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

இதில் ஒரு காட்சிப்பதிவில் கள்ளத் துப்பாக்கியால் கலவரத்தில் சுடுபவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஜஹங்கீர்புரியின் சி-பிளாக் பகுதியை சேர்ந்த சோனு ஷேக் என்பவரான இவர், நீலநிறக் குர்தா, பைஜாமா அணிந்தபடி கையில் துப்பாக்கியுடன் சுடும் காட்சி இருந்துள்ளது. இந்தத் தகவல் அறிந்த சோனு ஷேக், ஊர்வலத்திற்கு பிறகு தலைமறைவாகி உள்ளார். இதனால், அவரது வீட்டில் இன்று டெல்லி போலீஸார் தன் படையுடன் விசாரணைக்காக நேரில் சென்றிருந்தனர்.

அப்போது அவர்களிடம் பேசிய சோனு ஷேக்கின் குடும்பத்தாரை தடுத்ததுடன் அப்பகுதியினர் ஒன்றிணைந்து போலீஸார் மீது கற்களை வீசத் தொடங்கியுள்ளனர். இதனால், ஜஹங்கீர்புரியில் மீண்டும் பதற்றம் உருவாகி பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ராமநவமி ஊர்வலத்தில் உருவானக் கலவரத்தின் பல்வேறு வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகின்றன. இதில் உள்ள வன்முறையாளர்களையும் அடையாளம் கண்டு டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in