ஜெ. மேல்முறையீட்டு வழக்கு 26-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஜெ. மேல்முறையீட்டு வழக்கு 26-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Updated on
1 min read

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா,சுதாகரன், இளவரசி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே ஆஜராகி வாதிட்டதாவது:

1991-96 காலகட்டத்தில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஆஞ்சநேயா பிரிண்ட்டர்ஸ், சூப்பர் டூப்பர் டிவி உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்தனர். இந்த நிறுவனங்களில் இருந்து மூவருக்கும் தனித்தனியாக வருமானம் வந்தது. சூப்பர் டூப்பர் டி.விக்கு 1,200 வாடிக்கையாளர்கள் கேபிள் இணைப்பு பெற்றதன் மூலம் சந்தாவாக ரூ.1.10 கோடி வருமானமாக வந்தது. இதை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வருமானமாக ஏற்கவில்லை.

தனியார் நிறுவனங்களின் மூலமாக வந்த வருமானத்தில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் பல்வேறு இடங்களில் சட்டப்பூர்வமாக சொத்து வாங்கினர். ஆனால் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இந்த சொத்துகள் அனைத்தும் ஜெயலலிதாவின் பணத்தில் வாங்கியதாக தெரிவித்துள்ளது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா மூவரும் ஜெயலலிதாவுடன் இணைந்து கூட்டு சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை மிகைப்படுத்திக்காட்ட வேண்டும் என்பதற்காக சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் சொத்துகளையும் அதில் இணைத்துள்ளனர்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரின் வருமானம், செலவு மற்றும் சொத்து விவரங்கள் ஆகியவற்றை தனித்தனியே தாக்கல் செய்யுங்கள் என சேகர் நாப்டேவுக்கு உத்தரவிட்டனர். மேலும் சேகர் நாப்டேவின் வாதத்திற்கு எழுத்துப்பூர்வமாக‌ பதில் அளிக்குமாறு கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு உத்தரவிட்டனர்.

அடுத்தக்கட்ட வழக்கு விசார ணை வரும் 26-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in