Published : 06 Jun 2014 10:09 AM
Last Updated : 06 Jun 2014 10:09 AM

பாலிடெக்னிக்கில் ஐடிஐ மாணவர்கள் ‘ஆக்கிரமிப்பு’ சீட் கிடைக்காமல் பிளஸ் 2 மாணவர்கள் பாதிப்பு

பாலிடெக்னிக் கல்லூரி ‘லேடரல் என்ட்ரி’யில் ஐடிஐ மாணவர்கள் அதிகம் சேர்ந்துவிடுவதால், அதிக மதிப்பெண் எடுத்த பிளஸ்2 மாணவர்கள்கூட இடம் கிடைக்காமல் அவதிப்படு கின்றனர்.

பிஇ, பிடெக் படிப்புகள் 4 ஆண்டு காலம் கொண்டவை. பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள், பி.எஸ்சி. (கணிதம்) பட்டதாரிகள் இவற்றில் நேரடியாக 2-ம் ஆண்டில் சேர்ந்துவிடலாம். இதற்கு ‘லேடரல் என்ட்ரி’ என்று பெயர். லேடரல் என்ட்ரிக்காக ஒவ்வொரு பொறியியல் கல்லூரியிலும் 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

3 ஆண்டு காலம் கொண்ட பாலிடெக்னிக் (பொறியியல் பட்டயம்) படிப்பிலும் லேடரல் என்ட்ரி உண்டு. பிளஸ் 2 மாணவர்கள், ஐடிஐ முடித்தவர்கள் லேடரல் என்ட்ரி முறையில் பாலிடெக்னிக் படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டில் சேர்ந்துவிடலாம். பாலிடெக்னிக்கிலும் லேடரல் என்ட்ரி மூலம் 20 சதவீத இடங்கள் நிரப்பப்படுகின்றன. அரசு, அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்த முறையில் சேர மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி இருக்கும்.

பாலிடெக்னிக்கில் லேடரல் என்ட்ரி மாணவர் சேர்க்கைக்கு பிளஸ் 2 அல்லது ஐடிஐ மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படுகிறது. ஐடிஐ தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 700. (சிலவகை பாடப் பிரிவுகளுக்கு 630) இதில் செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண்கள் 400. செய்முறைத் தேர்வுக்கு அதிக மதிப்பெண் ஒதுக்கப்பட்டிருப்பதால், ஐடிஐ மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று லேடரல் என்ட்ரியில் எளிதாக நுழைந்துவிடுகின்றனர்.

பிளஸ்2 மாணவர்களின் நிலை அப்படி அல்ல. பிளஸ்2-வில் 1000-க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள்கூட லேடரல் என்ட்ரியில் நுழைய முடியாமல் அவதிப்படுகின்றனர்.

90% இடங்களில் ஐடிஐ மாணவர்

2014-15ம் கல்வி ஆண்டுக்கான லேடரல் என்ட்ரி மாணவர் சேர்க்கை பல அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகளில் தொடங்கி முடிவடையும் நிலையில், பல கல்லூரிகளில் இந்த நிலை காணப்படுகிறது. தங்களது கல்லூரியில் 90 சதவீத இடங்களில் ஐடிஐ மாணவர்கள் சேர்ந்திருப்பதாக அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றின் பேராசிரியர்கள் தெரிவித்தனர். 10-ம் வகுப்பில் இரண்டு மூன்று முறை பெயிலாகி பின்னர் தேர்ச்சி பெற்று ஐடிஐ முடித்த மாணவர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர். அதே நேரம் 10-ம் வகுப்பில் 400-க்கு மேலும், பிளஸ்2-வில் 950 மதிப்பெண், 1,000-க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள்கூட இடம் கிடைக்காமல் வெளியே உள்ளனர் என்றும் அந்த பேராசிரியர்கள் கூறினர்.

பிஇ, பிடெக் படிப்புகளில் தொழிற்கல்வி மாணவர்களுக்கு அவர்களது படிப்புவாரியாக தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்படும். அதேபோல, பாலிடெக்னிக் லேடரல் என்ட்ரி யிலும் ஐடிஐ முடித்தவர்களுக்கு குறிப்பிட்ட சதவீத இடமும், பிளஸ் 2 மாணவர்களுக்கு குறிப் பிட்ட சதவீத இடமும் ஒதுக் கினால், குறிப்பிட்ட பிரிவினர் பாதிக்கப்படுவதை தவிர்க்கலாம் என்றும் பாலிடெக்னிக் பேராசிரியர்கள் யோசனை தெரி வித்தனர். இதுகுறித்து தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பிளஸ் 2 மாணவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x