Published : 15 Apr 2016 10:15 AM
Last Updated : 15 Apr 2016 10:15 AM

அரசு டாக்டரை தாக்கிய வழக்கில் பாஜக எம்.பி.க்கு 3 ஆண்டு சிறை

அரசு டாக்டரை தாக்கிய வழக்கில் குஜராத் மாநில பாஜக எம்.பி. உட்பட 5 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அம்ரேலி பகுதி பாஜக மகளிரணி தலைவி மது ஜோஷி. அவரது மகன் ரவி. கடந்த 2013 ஜனவரியில் ஒரு கும்பலால் ரவி தாக்கப்பட்டார். உடனடியாக அவர் அம்ரேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு பணியில் இருந்த டாக்டர் தான்ஜி தாபி, ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தார். அந்த நோயாளியை விட்டுவிட்டு ரவிக்கு சிகிச்சை அளிக்கும்படி மது ஜோஷியும் அவரது ஆதரவாளர்களும் வலியுறுத்தினர். ஆனால் டாக்டர் தாபி சம்மதிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து அம்ரேலி தொகுதி பாஜக எம்.பி. நரேன் கச்சாடியா மருத்துவமனைக்கு சென்று டாக்டர் தான்ஜி தாபியை தாக்கினார்.

இதுதொடர்பாக அம்ரேலி போலீஸார் விசாரித்து நரேன் கச்சாடியா எம்.பி, மது ஜோஷி, ரவி ஜோஷி, ரமேஷ், கிரித் வம்ஜா ஆகிய 5 பேர் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை அம்ரேலி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

நீதிபதி பி.ஆர். பட் விசாரித்து நேற்றுமுன்தினம் தீர்ப்பு வழங்கினார். அதன்படி பாஜக எம்.பி. நரேன் கச்சாடியா உட்பட 5 பேருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

எனினும், மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக சிறை தண்டனை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்படும். அந்த வகையில் நரேன் கச்சாடியா எம்.பி.யும் தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x