Published : 12 Apr 2022 09:31 PM
Last Updated : 12 Apr 2022 09:31 PM

ஒப்பந்ததாரர் தற்கொலை விவகாரம் | ‘ராஜினாமா பேச்சுக்கே இடமில்லை’ - கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா

கர்நாடகா உள்ளாட்சித்துறை மற்றும் ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா

மங்களூரு: ஒப்பந்ததாரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் கர்நாடகா பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா பாஜகவைச் சேர்ந்த ஊரகவளர்ச்சிமற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சரான கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது சந்தோஷ் பாட்டீல் என்ற ஒப்பந்ததாரர் ஊழல்குற்றசாட்டு சுமத்தியிருந்தார். வலதுசாரி அமைப்பான ஹிந்து வாஹினி என்ற அமைப்பின் தேசிய செயலாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சந்தோஷ்பாட்டீல், தனக்கு அரசின் சார்பாக, ரூ.4 கோடிக்கு வேலை ஒதுக்கப்பட்டதாகவும், அதை முடித்த பின்னரும் அதற்கான நிதி விடுவிக்கப்படவில்லை என்றும், ஈஸ்வரப்பாவின் உதவியாளர்கள் 40 சதவீதம் குறைக்கவேண்டும் எனக் கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் தேசிய ஊடகம் ஒன்றிற்கு பேட்டியும் அளித்திருந்தார். இந்தநிலையில் சந்தோஷ் காணாமல் போய் விட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று செவ்வாய்க்கிழமை விடுதி அறை ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவர் தனது தற்கொலை குறித்து எழுதியுள்ள கடிதத்தில், "எனது தற்கொலைக்கு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா மட்டுமே காரணம். எனது லட்சியங்களை ஒதுக்கி வைத்து விட்டு இந்த முடிவை நான் எடுக்கிறேன். நமது பிரதமர் மோடி, கர்நாடகா முதல்வர், நமது அன்புக்குரிய லிங்காயத் தலைவர் பிஎஸ்ஒய் மற்றும் அனைவரும் எனது மரணத்திற்கு பின்னர், எனது மனைவி, மகனுக்கு உதவி செய்ய வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் ஈஸ்வரப்பா, "ராஜினா செய்யும் பேச்சுக்கே இடமில்லை. சந்தோஷ் பாட்டீலுக்கு எதிராக நான் தொடர்ந்துள்ள வழக்கின் தீர்ப்புத்தாக காத்திருக்கிறேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. இந்த தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்த முதல்வர் பசவராஜ் பொம்மையாவைக் கேட்டுக் கொண்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், சந்தோஷ் பாட்டீல் மரணம் குறித்து கர்நாடகா காங்கிரஸ் கட்சி பாஜக மீது கடுமையாக சாடியுள்ளது. இதுகுறித்து "ஒரு முதல்வராக பொம்மை அவரது அமைச்சர் ஈஸ்வரப்பா மீது நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார். அமைச்சரவையில் இருந்து அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். சந்தோஷின் மரணத்திற்கு ஈஸ்வரப்பாதான் காரணம். அவர் ஒரு ஊழல்வாதி என்று அனைவருக்கும் தெரியும். ஈஸ்வரப்பாவைக் கைது செய்ய வேண்டும்" என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.

ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் மரணம் குறித்து பராபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என்று மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x