Published : 31 Mar 2022 06:45 AM
Last Updated : 31 Mar 2022 06:45 AM

மதச்சார்பின்மை பற்றி பேசும் இடதுசாரிகள் ஆளும் கேரளாவில் வேற்று மதத்தவர் என்பதால் புறக்கணிக்கப்பட்ட பரதநாட்டிய கலைஞர்

மன்சியா

திருவனந்தபுரம்: கேரளாவில் புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர்களில் முக்கியமானவர் மன்சியா (27). இஸ்லாமியரான இவருக்கு பரதநாட்டியத்தின் மீது சிறுவயதில் இருந்தேஈர்ப்பு அதிகம். பரதத்தில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றஇவர், இப்போது மலையாள தொன்மக் கலைகளை வளர்த்தெடுக்க உருவாக்கப்பட்ட கலாமண்டலம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

மன்சியா பரதநாட்டியம் கற்றுக்கொண்டதும், ஆலயங்களில் பரத நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதும் இஸ்லாமிய மத கட்டமைப்புக்கு எதிரானது என அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், மன்சியா, தொடர்ந்து தனது பரதத்தை அரங்கேற்றி வந்தார்.

இந்நிலையில், கேரள அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருச்சூர் மாவட்டம் இறிஞ்சாலக்குடாவில் உள்ள கூடல் மாணிக்கம் கோயில் திருவிழா ஏப்ரல் 21-ம் தேதி நடைபெறுகிறது. இதில் மன்சியாவின் பரத நிகழ்ச்சிநடைபெறும் என அறிவிக்கப் பட்டது.

இந்நிலையில், அவரைத் தொடர்பு கொண்ட ஆலய நிர்வாகிகள், ‘‘மன்சியா மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்து கோயிலில் நடனமாட அவரை அனுமதிக்கமுடியாது’’ என தெரிவித்தனர்.

மதச்சார்மற்ற மாநிலம் என முற்போக்கு முகம் காட்டும் இடதுசாரிகளின் ஆட்சியில் இப்படிஒரு நிலையா? என சமூகவலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து மன்சியா இந்துதமிழ் திசையிடம் கூறும்போது, ‘‘கேரளாவின் மேடைகளும் மதம் சார்ந்தவை ஆகிவிட்டது. ஆனால் எனக்கு இது புது அனுபவம் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு குருவாயூர் கோயிலில் எனக்குக் கொடுத்த வாய்ப்பும் இதே காரணத்துக்காக தட்டிப் பறிக்கப்பட்டது. காலம் இன்னும் மாறவே இல்லை. நான் கடந்த ஜனவரி 8-ம் தேதி, இந்து மதத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஷ்யாம் கல்யாணை திருமணம்செய்துகொண்டேன். அதனால்நான் இப்போது இந்துவாகிவிட்டேனா என்னும் கேள்வியையும் எதிர்கொண்டேன். கலைக்கோ, கலைஞர்களுக்கோ மத அடையாள எல்லையே கிடையாது. மதம்இல்லை என்பதால் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறேன். இவ்வளவுதான் நம் மதச்சார்பின்மை’’ என்றார்.

இதுகுறித்து கோயில் அறங்காவலர் பிரதீப் மேனன் கூறும்போது, ‘‘கோயில் விதிமுறையின்படி இந்துக்களுக்கு மட்டுமே இங்கு நிகழ்ச்சிக்கான வாய்ப்பு கொடுக்கப்படும். 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் 800 கலைஞர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். அனைவரிடமும் அவர்களது மதத்தைப் பற்றிக் கேட்டே நிகழ்வை உறுதி செய்தோம். மன்சியா தனக்குமதம் இல்லை என எழுத்து மூலமாகவே தெரிவித்தார். அதனால்தான் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x