Published : 23 Mar 2022 09:46 PM
Last Updated : 23 Mar 2022 09:46 PM

'கலாச்சார அடையாளங்களை அழிக்கிறது ரயில்வே' - மாநிலங்களவையில் கனிமொழி சோமு விளாசல்

புதுடெல்லி: "ரயில்வே துறை அமைச்சர், ரயில்வே என்ற மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனத்தின் தலைமைப் பிரதிநிதி தானே தவிர, அவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அல்ல" என்று தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு பேசியுள்ளார்.

மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தில் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி என்.வி.என். சோமு கலந்து கொண்டு பேசினார். அவர் தனது பேச்சில், "சில பல ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே டிக்கெட்டுகள் விற்பனை பற்றி மட்டும் தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்போதோ, ரயில்வே துறையே விற்பனைக்கு தயாராக இருக்கிறது என்பதை முதலில் இந்த அவையிலுள்ள உறுப்பினர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

அரசின் துறைகளை தனியார் மயமாக்குவது... அரசின் சொத்துக்களை விற்பது என்று தங்களுக்கு நன்கு தெரிந்த விஷயத்தில் இந்த ஒன்றிய அரசு உறுதியாக நிற்கிறது. ரயில்வே தனியார் மயம்... ரயில் நிலையங்கள் தனியார் மயம்... என்று பட்டியல் நீள்கிறது. ரயில் டிக்கெட் விற்பனையில் தொடங்கிய பயணம் ரயில்வே துறையை விற்பதில் போய் நிற்கிறது. என்னே முன்னேற்றம்!

பதிமூன்று லட்சம் ஊழியர்களைக் கொண்ட உலகின் நான்காவது பெரிய துறையாக விளங்குவது நமது ரயில்வே துறை. சுமார் 130 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் தினசரி இரண்டு கோடியே முப்பது லட்சம் மக்கள் 13 ஆயிரம் ரயில்களில் 64 ஆயிரம் கி.மீ. தூரம் ரயில் பயணப் பாதையில் பயணிக்கிறார்கள். நமது நாட்டின் மிகப்பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் ரயில்வே துறையைச் சார்ந்தே இருக்கிறது. ஒன்றிய அரசு விரும்புகிறதோ இல்லையோ, இந்த நாட்டை ஒருங்கிணைக்கும் மிக உன்னதமான பணியைச் செய்து வந்தது ரயில்வே துறை.

செய்து வந்தது என்று இறந்த காலத்தில் நான் குறிப்பிடக் காரணம், இந்த பா.ஜ.க. ஒன்றிய அரசின் கொள்கையான எதேச்சதிகாரம், வெறுப்புணர்வை வளர்ப்பது, சமூக நீதியைச் சிதைப்பது போன்ற கொள்கைகளை இப்போது ரயில்வே துறையும் பரப்ப ஆரம்பித்திருக்கிறது என்பதால்தான். இதை நான் போகிற போக்கில் சொல்லவில்லை. அதற்கு ஆதாரமாக சில உதாரணங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். சுதந்திரம் அடைந்த காலம் தொடங்கி மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், மருத்துவ வல்லுனர்கள், உள்ளிட்ட சுமார் 53 வகையானவர்கள் சலுகை கட்டணத்தில் ரயிலில் பயணித்து வந்தார்கள்.

ஆனால், இப்போது வருமானத்தை மட்டுமே மனதில் வைத்து, மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பல பிரிவினருக்கு கட்டணச் சலுகை விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. சுதந்திரத்திற்கு முன்புதான் லாபத்தை மனதில் வைத்து ரயில்வே செயல்பட்டது. இப்போதும் இந்த ஒன்றிய அரசு லாபத்தை மனதில் வைத்துதான் ரயில்வே துறையை இயக்குகிறது என்றால், நாம் இன்னும் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில்தான் இருக்கறோமா? அப்படியானால் இதை சமூக அநீதி என்றுதானே அழைக்க முடியும்? இந்த அவல நிலையைப்போக்கும் வகையில் முன்பதிவு செய்யப்படாத மற்றும் இரண்டாம் வகுப்பு படுக்கை வகுப்பில் மட்டுமாவது பறிக்கப்பட்ட கட்டணச் சலுகைகளை சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

ரயில்வே என்ற மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனத்தின் தலைமைப் பிரதிநிதிதான் ரயில்வே அமைச்சரே தவிர, அவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அல்ல என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்த நேரத்தில் ஏழைகளின் நலனை மனதில் வைத்து இந்தத் துறையை நிர்வகித்ததுடன் லாபகரமாகவும் இத்துறையை மாற்றிக்காட்டிய லாலு பிரசாத் யாதவ்வை நினைவுகூர்கிறேன். ரயில்களில் சுற்றுச்சூழல் பற்றி இப்போது நாம் அதிகம் பேசுகிறோம். ஆனால் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே இதுபற்றிச் சிந்த்தவர் அவர்தான். ரயில் நிலையங்களில் விற்கப்படும் டீயை மண் குவளைகளில் விற்க வழிவகுத்தவர் அவரே. அவரும் ரயில் நிலையத்தில் டீ விற்றவர்தான். ஆனால் அவர் ரயில்வே துறையை விற்க நினைத்ததில்லை!

இந்த உலகத்தில் மனிதனுக்குத் தேவையான அடிப்படை விஷயங்கள், உணவு, உடை மற்றும் இருப்பிடம். ஒவ்வொரு மனிதனுக்கும் இம்மூன்றும் முழுமையாக் கிடைப்பதை உறுதி செய்வதே எந்த ஒரு அரசின் கடமையாகவும் பொறுப்பாகவும் இருக்க முடியும். மக்களுக்கு உணவளிக்கும் வாய்ப்புள்ள ஒருசில துறைகளில் ரயில்வே துறைக்கும் முக்கிய பொறுப்பு உள்ளது. மனிதனின் கலாச்சாரத்தோடு ஒன்றிப்போன விஷயங்களில் உணவும் ஒன்று. ஆனால், உணவு விஷயத்தில் மக்களின் கலாச்சார அடையாளங்களை அழிக்கும் வகையில் ரயில்வே துறை செயல்படுகிறது.

இதற்கு உதாரணமாக, எங்கள் மாநிலத்தில் நடக்கும் விஷயத்தையே சொல்லலாம். கோவையிலிருந்து சென்னைக்கு செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கும் தமிழ்நாட்டுப் பயணிகள், ரொட்டி, பன்னீர், பருப்பு, சன்னா போன்ற வட மாநில மக்கள் விரும்பி சாப்பிடுகிற உணவு வகைகளை வாங்கி சாப்பிடும் கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். தமிழ்நாட்டின் உணவு வகைகளான இட்லி தோசை, சாம்பார், வடை போன்ற உணவு வகைகளை அந்த ரயிலில் விற்க வசதி இருந்தும், அவர்களின் கலாச்சாரத்திற்கு தொடர்பே இல்லாத உணவுகளை சாப்பிடும் நிலைக்கு அவர்களைத் தள்ளுவது ஏன்?

தமிழ்நாடு மட்டுமல்ல... ஒவ்வொரு மாநில மக்களும் தங்களது கலாச்சார அடையாளத்தை இழக்கும் வகையிலும் அவற்றை அழிக்கும் வகையிலும்தான் ரயில்வே துறை நடந்துகொள்கிறது. இது ஒவ்வொரு மாநிலத்தின் தனித்துவமான அடையாளத்தை அழிப்பது மட்டுமல்ல... இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்கும் முயற்சியும் கூட.

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தமிழகத்திற்கு இப்படி குறைந்த நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படவுள்ள 11 புதிய ரயில்வே திட்டங்களுக்கு 59 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் பத்து திட்டங்களுக்கு தலா வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கி தனது பெருந்தன்மையைக் காட்டியிருக்கிறார் ரயில்வே அமைச்சர். 2016ம் ஆண்டில் ரயில்வேக்கு என தனி பட்ஜெட் போடத் தொடங்கியது முதலே தமிழ்நாட்டுக்கு இப்படிதான் அநீதி இழைக்கப்பட்டு வருகிறது.

தான் தொடங்கிய ரயில்வே வளர்ச்சித் திட்டங்களுக்குக் கூட போதிய நிதியை ஒதுக்கத் தயங்கும் ரயில்வேத் துறையின் கேலிக்கூத்தான நிலையை நாம் காண்கிறோம். அதுமட்டுமல்ல, ரயில்வே திட்டங்களுக்கென தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கேட்கும் நிதியைக் கொடுக்கவும் ரயில்வேத் துறை தயாராக இல்லை. தமிழ்நாடுக்கு எந்த நிதியையும் ஒதுக்குவதில்லை என்று ரயில்வே துறை மறைமுகமாக எதுவும் முடிவெடுத்திருக்கிறதா? இதை வெறுப்பு அரசியல் என்று கூறலாமா?

தமிழ்நாட்டின் ரயில்வே தேவைகள் இன்னும்கூட நிறைய இருக்கின்றன. நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் அத்திட்டங்கள் பற்றி ரயில்வே துறையின் பாராமுகத்தைக் கண்டு தமிழக மக்கள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். வடக்கு மட்டுமல்ல... நாங்களும் உங்கள் நிர்வாகத்தின் கீழுள்ள மக்கள்தான். நாங்களும் மக்களால், மக்கள் பிரதிநிதிகளால் தேர்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள்தான். மக்களுக்காக சேவை செய்ய வந்தவர்கள்தான். இந்த விஷயத்தில் உங்களிடம் இருந்து நாங்கள் வேறுபட்டவர்கள் அல்ல என்பதை ரயில்வே அமைச்சருக்கும் ஒன்றிய அரசுக்கும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உங்களுக்குப் போதுமான எண்ணிக்கையில் எம்.பி.க்கள் இருப்பதாலேயே, உங்களுக்கு வாக்களிக்காத மக்கள் மற்றும் மாநிலங்கள் மீது வெறுப்பைக் காட்டுவதற்கு உங்களுக்கு அதிகாரமில்லை. அதிகாரம் என்பது நிரந்தரமானதல்ல. வினை விதைத்தால் வினையை அறுப்பீர்கள். கூட்டாட்சித் தத்துவம் காப்பற்றப்பட வேண்டுமானால் மாநில சுயாட்சியும், மாநிலங்களின் தனித்த கலாச்சார அடையாளங்களும் மதிக்கப்பட வேண்டும். மக்களின் தேவையும் உணர்வுகளும் கவனிக்கப்பட வேண்டும்.

ஒரு ஜனநாயக நாட்டில் இந்தத் துறையை நிர்வகிக்கிறோம் என்பதை ரயில்வே அமைச்சர் உணர வேண்டும். ஒன்றிய அரசின் வருமானத்தில் அதிக பங்களிப்பைச் செய்யும் இரண்டாவது பெரிய மாநிலம் என்ற இடத்தைப் பெற்றுள்ள தமிழ்நாடு, இன்னும் நிறைய திட்டங்களை, நிதியைப் பெற தகுதியான மாநிலமாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x