Published : 22 Mar 2022 05:45 PM
Last Updated : 22 Mar 2022 05:45 PM

மக்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் அகிலேஷ் யாதவ்: எதிர்க்கட்சித் தலைவராக தீவிர அரசியலில் ஈடுபட திட்டம்

ஓம் பிர்லாவை சந்தித்து அகிலேஷ் யாதவ் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். 

லக்னோ: உ.பி.யில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எம்எல்ஏவாக தேர்வான சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தான் வகித்து வந்த மக்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

உத்தர பிரதேச தேர்தலில், பாஜககூட்டணி 273 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பாஜக மட்டும் 255 தொகுதிகளைக் கைப்பற்றியது. இது கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் பெற்ற தொகுதிகளை விட குறைவு. அதேநேரத்தில் கடந்த தேர்தலில் குறைந்த தொகுதிகளை கைப்பற்றிய சமாஜ்வாதி கட்சி, இந்தத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 125 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. சமாஜ்வாதி மட்டும் 111 தொகுதிகளை கைப்பற்றியது.

இந்த தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் கோட்டையாக கருதப்படும் மெயின்புரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கர்ஹால் சட்டப்பேரவைத் தொகுதியில் அகிலேஷ் யாதவ், பாஜக எம்பி எஸ்பி சிங் பாகேலை 67,504 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அகிலேஷ் யாதவ் அசம்கர் மக்களவை உறுப்பினராக ஏற்கெனவே பதவி வகித்து வந்தார். எம்.பி.யாகவே சட்டப்பேரவைத் தேர்தலிலும் களம் கண்டார். எம்எல்ஏவாக தேர்வானதால் அவர் இரண்டில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும். அகிலேஷ் மக்களவை எம்.பி.யாக நீடிக்க விரும்புவதாக முதலில் தகவல் வெளியானது.

ஆனால் பாஜக தொடர்ந்து 2-வது முறையாக வென்றுள்ள நிலையில் யோகியின் அரசுக்கு எதிராக தீவிர அரசியலில் இறங்க அகிலேஷ் யாதவ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்ற முடிவு செய்துள்ளார்.

அகிலேஷ் யாதவ் தான் வகித்து வந்த மக்களவை எம்.பி. பதவியை இன்று ராஜினாமா செய்தார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை இன்று சந்தித்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

இதன் மூலம் நாடாளுமன்ற மக்களவையில் சமாஜ்வாதி கட்சியின் எம்.பி.க்கள் எண்ணிக்கையை நான்காக குறைகிறது. கடந்த 2019 தேசியத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி ஐந்து மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றது.

அகிலேஷ் யாதவின் இந்த நடவடிக்கையால் உத்தரப் பிரதேசத்தில் பாஜக மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான அரசியலை சமாஜ்வாதி கட்சி முன்னெடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x