வங்கதேசத்தில் படகு மீது கப்பல் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு

வங்கதேசத்தில் படகு மீது கப்பல் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

டாக்கா: வங்கதேசத்தில் பயணிகள் படகுமீது சரக்கு கப்பல் மோதி, அதைமூழ்கடித்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரை காணவில்லை. இந்த விபத்துதொடர்பான வீடியோ இணையத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு அருகில் உள்ள சீதாலக்ஷ்யா நதியில் நேற்று முன்தினம் எம்.வி. அப்சருதீன் என்ற படகு 60-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரில் வந்த எம்.வி.ருபோஷி-9 என்ற சரக்கு கப்பல், படகு மீது மோதி அதை மூழ்கடிக்கச் செய்தது.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அதில் படகு மீது சரக்கு கப்பல்மோதியவுடன் படகில் இருந்தவர்கள் அலறுவதும், சிலர் ஆற்றில் குதிப்பதும் பதிவாகியுள்ளது. மேலும் எஞ்சிய பயணிகளுடன் அந்தப் படகை கப்பல் மூழ்கடிக்கச் செய்வதும் தெரிகிறது.

அருகில் மற்றொரு படகில் இருந்த ஒருவர் இதனை தனது செல்போனில் படம் பிடித்துள்ளா். இந்த வீடியோ ரெடிட் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் பரவியது. ரெடிட் சமூக ஊடகத்தில் மட்டும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது.

இந்த காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும், இந்தக்காட்சிகள் கடினமான இருப்பதாகவும் பலர் கருத்து தெரிவித் துள்ளனர். இந்த விபத்தை தொடர்ந்து 3 பெண்கள், ஒரு குழந்தை உள்ளிட்ட 5 பயணிகளின் உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டனர். 22 பேர் ஆற்றில் நீந்தி கரை சேர்ந்துவிட்ட நிலையில் மற்றவர்களை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in