பெற்றோர் உயிருடன் இருக்கும் போது சொத்தில் மகன் உரிமை கோர முடியாது: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

பெற்றோர் உயிருடன் இருக்கும் போது சொத்தில் மகன் உரிமை கோர முடியாது: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மும்பை: மும்பையைச் சேர்ந்த ஒருபெண், மறதி உட்பட பல்வேறு நோய் காரணமாக படுத்த படுக்கையாக உள்ள தனது கணவரின் சொத்துக்கு சட்ட பாதுகாவலராக தன்னை நியமிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவரை கவனித்து வருகிறேன். அவருக்கான மருத்துவ செலவுக்காக ஏராளமாக கடன் வாங்கி உள்ளேன்.

எங்களுக்கு ஒரு மகன் இருந்தும் எங்களை கண்டுகொள்ளவில்லை. எனது பெயரில் ஒரு வீடும், என் கணவர் பெயரில் ஒருவீடும் உள்ளது.எனது கணவர் பெயரில் உள்ள வீட்டை விற்றுகடனை அடைக்க திட்டமிட்டுள்ளேன். இதற்காக, அவரது பெயரில்உள்ள சொத்துக்கு பாதுகாவலராக என்னை நியமிக்க உத்தரவிட வேண்டும்” என கோரியுள்ளார்.

இந்நிலையில், தனது தாய் தொடர்ந்த வழக்கில் தன்னையும் சேர்க்கக் கோரி தனியாக வசித்துவரும் அவரது மகன் கோரிக்கை வைத்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், “தந்தையின் சொத்தில் மகனுக்கு உரிமைஇருப்பது சாதாரண நடைமுறைதான். அந்த வகையில் எனக்கும் அதில் பங்கு உள்ளது. எனவே, எனது அனுமதி இல்லாமல் தந்தையின் சொத்தை விற்க அனுமதிக்கக் கூடாது” என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கவுதம் படேல் மற்றும் மாதவ் ஜம்தார் பிறப்பித்த உத்தரவில், “பெற்றோரின் பாதுகாவலராக நீங்களே (மகன்) முன்வந்து செயல்பட்டிருக்க வேண்டும். உடல்நலம் குன்றிய உங்கள்தந்தையை ஒரு முறையாவது மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றீர்களா? மருத்துவ செலவுக்கு பணம் வழங்கினீர்களா?

பெற்றோர் உயிருடன் இருக்கும் வரை அவர்களுடைய சொத்தில் மகன் சட்டப்படி உரிமை கோரமுடியாது. எனவே உங்கள் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தந்தையின் சொத்தை விற்க மகனுடைய அனுமதி தேவையில்லை” என்றனர்.

மேலும் கணவரின் மருத்துவ செலவுக்காக கூட்டு வங்கிக் கணக்கு தொடங்குமாறு அந்தப் பெண்ணுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வீடு விற்பனை தொடர் பான பேச்சுவார்த்தையை தொடர அனுமதி அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in