Published : 17 Mar 2022 06:52 PM
Last Updated : 17 Mar 2022 06:52 PM

இளம் அதிகாரிகள் தங்களின் பணி எளிதாக இருக்கவேண்டும் என நினைக்கக் கூடாது: பிரதமர் மோடி அறிவுரை

புதுடெல்லி: ”பெருந்தொற்றுக்கு பிறகு உருவாகியிருக்கும் புதிய உலகத்தில் இந்தியா தனது பங்கை அதிகரித்து வேகமாக முன்னேற வேண்டி இருக்கிறது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக கல்விக் கழகத்தின் (LBSNAA) 96-வது பொதுவான அடிப்படை பயிற்சி வகுப்பின் நிறைவு விழாவில் வியாழக்கிழமை காணொலி மூலம், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, அங்கு கட்டப்பட்டுள்ள புதிய விளையாட்டு வளாகத்தை தொடங்கி வைத்த அவர், புனரமைக்கப்பட்ட ஹாப்பி வேலி வளாகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பின்னர், 96-வது பொதுவான அடிப்படை பயிற்சி வகுப்பை நிறைவு செய்துள்ள அதிகாரிகளுக்கு பாராட்டுத் தெரிவித்த பிரதமர், அவர்களுக்கு மகிழ்ச்சியான ஹோலி தருணத்தில் வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து அவர்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, "சுதந்திரதத்தின் 75 -வது ஆண்டு பெருவிழாவில் நீங்கள் தீவிர சேவைக்குள் நுழைகிறீர்கள். அடுத்த 25 ஆண்டுகளுக்கான அமிர்த காலத்தில் தேசத்தின் வளர்ச்சியில் உங்களின் பிரிவு முக்கிய பங்கினை வகிக்கும்.

21 ஆம் நூற்றாண்டில் உலகம் இந்தியாவை எதிர் நோக்கி இருக்கிறது. பெருந்தொற்றுக்குப் பின் ஒரு புதிய உலக ஒழுங்கு உருவாகியிருக்கிறது. அதில் இந்தியா தனது பங்கினை அதிகரித்து, அதிவேகமாக முன்னேற வேண்டியுள்ளது. இந்த நூற்றாண்டின் நமது மிகப்பெரிய இலக்கு தற்சார்பு இந்தியா. நவீன இந்தியா குறித்த சிறப்பு கவனத்துடன் இந்த காலத்தின் முக்கியத்துவத்தை அதிகாரிகள் மனதில் கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பை நாம் நழுவ விட முடியாது.

குடிமை சேவையில் சர்தார் வல்லபாய் பட்டேலின் கருத்துக்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சேவை மற்றும் கடமை உணர்வு பயிற்சியின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும். உங்களது சேவையின் அனைத்து ஆண்டுகளிலும் சேவையின் அம்சங்களிலும், கடமையிலும் உங்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் முறை வெற்றி அளவிடப்பட வேண்டும். கடமை உணர்வோடும், ஒரே நோக்கத்தோடும் செய்யப்படும் போது பணி சுமையாக தெரியாது.

கோப்புகளின் உண்மையான உணர்வு களத்திலிருந்து வருவதால், களத்தின் அனுபவத்தை நீங்கள் பின்பற்ற வேண்டும். கோப்புகளில் இருப்பவை வெறும் எண்களும், புள்ளி விவரங்களும் அல்ல, அவை மக்களின் வாழ்க்கையையும், விருப்பங்களையும் கொண்டுள்ளன. நீங்கள் எல்லோரும் எண்களுக்கு பணி செய்பவர்களாக இல்லாமல், மக்களின் வாழ்க்கைக்காக பணி செய்பவர்ளாக இருக்க வேண்டும்.

அதிகாரிகளாகிய நீங்கள் பிரச்சினைகளின் மூல காரணத்தை கண்டறிந்து அவற்றுக்கு நிரந்தர தீர்வு காண விதிகளை மாற்றியமைக்க வேண்டும். அமிர்த காலத்தில் நாம் அடுத்த நிலைக்கு சீர்திருத்தங்களை செய்ய வேண்டும், செயல்பட வேண்டும், மாற்றம் காண வேண்டும்.

எனவே, இன்றைய இந்தியா ‘அனைவரின் முயற்சி’ என்ற உணர்வுடன் முன்னேறுகிறது. கடைகோடியில் இருக்கும் கடைசி மனிதனின் நல்வாழ்வு ஒவ்வொரு முடிவு பற்றிய கணிப்புக்கு உரைகல்லாக இருக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் மந்திரத்தையும் நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

அதிகாரிகள் தங்கள் மாவட்டங்களின் உள்ளூர் நிலையிலான 5, 6 சவால்களை அடையாளம் கண்டு, அதனை சரி செய்ய பாடுபட வேண்டும். சவால்களுக்கு தீர்வு காண்பதில் முதல் படியாக இருப்பது சவால்களை அடையாளம் காண்பது தான்

ஏழைகளுக்கு கல் வீடு கட்டித் தருதல், மின்சார இணைப்பு வழங்குதல் போன்ற சவால்களுக்கு தீர்வு காண பிரதமரின் வீட்டு வசதி திட்டம், சௌபாக்யா திட்டம், முன்னேற விரும்பும் மாவட்டங்களுக்கான திட்டங்கள் போன்றவை அரசால் அடையாளம் காணப்பட்டுள்ளன. பல்வேறு அடிப்படை கட்டமைப்புத் திட்டங்களில் ஒருங்கிணைப்பு தற்போது அவசியாகிறது அதற்கு பிரதமரின் விரைவு சதி பெருந்திட்டம் பெருமளவுக்கு தீர்வாக இருக்கும்.

சவால்மிக்க பணி, அதற்கே உரிய மகிழ்ச்சியை தருவதால் அதிகாரிகள் எளிதான வேலையாக இருக்க வேண்டும் என்று ஒருபோதும் பிரார்த்தனை செய்யக்கூடாது. அதிக வசதியான வாழ்க்கை பற்றி நீங்கள் சிந்திப்பது உங்களின் முன்னேற்றத்தையும் நாட்டின் முன்னேற்றத்தையும் அதிகம் தடுப்பதாக அமையும்.

இந்த கல்வி நிறுவனத்திலிருந்து புறப்படும் நேரத்தில் தங்களின் விருப்பங்களையும், திட்டங்களையும் பதிவு செய்து கொள்ள வேண்டும். 25 அல்லது 50 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் அவற்றை பார்க்கும் போது சாதனையின் அளவை மதிப்பீடு செய்ய முடியும். எதிர்கால பிரச்சினைகள் பெருமளவு தரவுகள் அறிவியலை சார்ந்திருப்பதோடு, இந்த தரவுகளை பிரித்தறியும் திறன் தேவைப்படும் என்பதால், பாடத்திட்டங்களில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடங்களும், தரவுகளும் சேர்க்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

புதிய பயிற்றுவிப்பு மற்றும் பாடப்பிரிவுடன் கர்மயோகி இயக்க கோட்பாடுகளின் அடிப்படையில், லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக கல்விக் கழகத்தின் 96 -வது அடிப்படை பாட வகுப்பு என்பது முதலாவது பொதுவான அடிப்படை பாட வகுப்பாகும். இந்த தொகுப்பு 16 சேவைகளிலிருந்து 488 பயிற்சி முடித்தவர்களையும், 3 ராயல் பூட்டான் சேவை செய்பவர்களையும் (நிர்வாகம், காவல்துறை, வனத்துறை) உள்ளடக்கியதாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x