Published : 15 Apr 2016 04:53 PM
Last Updated : 15 Apr 2016 04:53 PM
அமலாக்கத் துறையினரின் கோரிக்கைக்கு இணங்க மத்திய வெளியுறவு அமைச்சகம் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை 4 வாரங்களுக்கு முடக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், பாஸ்போர்ட் சட்டம் பிரிவு 10 (3) (சி) யின் கீழ் இவரது பாஸ்போர்ட்டை நிரந்தரமாக ஏன் முடக்கக் கூடாது? என்பதற்கு விளக்கம் கேட்டு ஒருவாரத்தில் மல்லையா பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த ஒருவாரத்தில் இவர் பதிலளிக்கவில்லையெனில் அவரிடம் பதிலளிக்க ஒன்றுமில்லை என்று முடிவெடுக்கப்பட்டு அவரது பாஸ்போர்ட் முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
விஜய் மல்லையா விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. எனவே அவரது பாஸ்போர்ட்டை முடக்கி உத்தரவிட வேண்டும் என்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஏப்ரல் 13-ம் தேதியன்று, மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
நிதிமுறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் மல்லையாவின் மீதான வங்கிக் கடன் நிலுவை உட்பட பல்வேறு புகார்களை அமலாக்கப் பிரிவு விசாரணை செய்து வருகிறது. இந்நிலையில் 3 முறை விசாரணைக்கு அழைத்தும் மல்லையா ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டி அமலாக்க இயக்குனரகம் மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு அவரது டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும் என்று கோரி கடிதம் எழுதியிருந்தது.
ஐடிபிஐ வங்கியில் ரூ.900 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் மல்லையாவை விசாரிக்க அவருக்கு 3 முறை வாய்ப்புகள் வழங்கியது, ஆனால் மல்லையா கடனை திருப்பிச் செலுத்தும் நடைமுறை குறித்த பேச்சுவார்த்தை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் ஆஜராக இயலாது என்று காரணம் தெரிவித்துள்ளார்.
பாஸ்போர்ட் முடக்கப்படும் பட்சத்தில் மல்லையா மீது ஜாமீனற்ற பிடிவாரண்ட் பிறப்பித்து, இண்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் அளிக்கச் செய்து உலகின் எந்த மூலையிலிருந்தாலும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.
இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகம் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்க உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT