Last Updated : 15 Mar, 2022 12:29 PM

 

Published : 15 Mar 2022 12:29 PM
Last Updated : 15 Mar 2022 12:29 PM

இ ஷரம் இணையதளத்தால் 26.5 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் பலன்: மத்திய அமைச்சர் தகவல்

மத்திய இணை அமைச்சர் ஸ்ரீ ராமேஷ்வர் டெலி.

புதுடெல்லி: மத்திய அரசின் இஷரம் (e-SHRAM) இணையத்தில் பதிவு செய்தமையால் பிரதமர் வேலைவாய்ப்பு நலத்திட்டங்களில் பலன்பெறும் அமைப்புசாரா தொழிலாளர்கள் 26.5 கோடி உள்ளதாக மக்களவையில் மத்திய தொழிலாளர் துறை இணை அமைச்சரான ஸ்ரீராமேஷ்வர் டெலி தெரிவித்தார்.

இதன் மீதான ஒரு கேள்வியை நேற்று மாநிலங்களவையில் அதிமுகவின் எம்.பி.யான பி.ரவீந்தரநாத் எழுப்பியிருந்தார். அதில் அவர், பிரதமர் நலத்திட்டங்களின் உதவிபெற கடந்த ஆகஸ்டில் துவங்கிய இஷரம் இணையத்தில் பதிவுசெய்த அமைப்புசாரா தொழிலாளர்கள் எண்ணிக்கை குறித்தும், கேட்டிருந்தார். குறிப்பாக இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை குறித்தும் தேனி மக்களவை எம்.பி.,யான ரவீந்திரநாத் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சரான ஸ்ரீராமேஸ்வர் டெலி அளித்த பதிலில், "இஷரம் இணைய பதிவானது, தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை வழங்குவதை எளிதாக்குகிறது. இதில், கடந்த மார்ச் 8 ஆம் தேதியின் நிலவரப்படி, 26.50 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

தகுதியுடைய பதிவு செய்யப்பட்ட அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும் தற்செயலான காப்பீட்டுத் திட்டத்தின் பலனைப் பெறுவதற்கு உரிமையுடையவர்கள். பிரதமர் பாதுகாப்பு மருத்துவ நலத்திட்டம் (பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா) மூலம் ஒரு வருடத்திற்கு ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பிலான மருத்துவ சிகிச்சைகள் இலவசம். மேலும், இவர்களில் தொழிலாளர்கள் மற்றும் வர்த்தர்களுக்கு பிரதமர் ஓய்வூதியத் திட்டம் (பிரதான் மந்திரி ஷ்ரமியோகி மந்தன்) மூலம், பலன்களைப் பெறுவதற்கு உரிமையுடையவர்கள்.

தற்போது, சமூகப்பாதுகாப்பு மற்றும் நலன்புரியும் திட்டங்களின் பலன்களைப் பெற்ற அமைப்புசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த தரவு எதுவும் இந்த இணையதளத்தில் பராமரிக்கப்படவில்லை" என்று தெரிவித்தார்.

அதிமுக எம்.பி ரவீந்திரநாத்தின் கேள்விக்கானப் பதிலும் மத்திய இணை அமைச்சர் டெலி, மாநிலவாரியான பதிவு விவரங்களையும் இணைத்துள்ளார்.

அதில், இஷரம் இணையத்தில் மிக அதிகமாகப் பதிவு செய்தவர்களாக உத்தரப் பிரதேசத்தில் 8,22,91,089 தொழிலாளர்கள் உள்ளனர். இதன் அடுத்த எண்ணிக்கையில் பிஹாரின் தொழிலாளர்கள் 2,77,37,173 இடம் பெற்றுள்ளனர். மூன்றாவதாக 2,52,93,972 மேற்குவங்க மாநிலத்தின் தொழிலாளர்களும் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் இவர்களது எண்ணிக்கை 67,53,461 என உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x