Published : 11 Apr 2016 08:44 PM
Last Updated : 11 Apr 2016 08:44 PM
அசாம் மாநிலத்துக்கு நான் எதுவும் செய்யவில்லை என்று பிரதமர் மோடி கூறுவதில் உண்மையில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் கூறினார்.
அசாமில் 61 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான 2-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி திஸ்பூர் தொகுதியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தனது மனைவி குர்ஷரன் கவுருடன் வாக்களித்தார். திஸ்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மதியம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முன்னாள் பிரதமரும் அவரது மனைவியும் வாக்களித்தனர்.
மன்மோகன் சிங் பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அசாமில் கடந்த 15 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகளுக்காக காங்கிரஸ் கட்சிக்கே மக்கள் வாக்களிப்பார்கள். அசாம் மாநிலத்துக்கு நான் எதுவும் செய்யவில்லை என்று பிரதமர் மோடி கூறுவதில் உண்மையில்லை. இதை அவரும் அறிவார்” என்றார்.
1991-ல் மத்தியில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசில் நிதியமைச்சராக மன்மோகன் சிங் பொறுப்பேற்றார். அப்போது அவர் அசாமில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட, மறைந்த முன்னாள் முதல்வர் ஹிதேஸ்வர் சைக்கியா வாய்ப்பளித்தார். அப்போது முதல் அசாமில் இருந்து மாநிலங்களவைக்கு மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்.
குவாஹாட்டியில் சொருமதாரியா பகுதியில் வீட்டு எண் 3989 என்ற முகவரியில் மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT