ஆந்திராவில் 10 ‘ஸ்மார்ட்’ நகரங்கள்: சந்திரபாபு நாயுடு தகவல்

ஆந்திராவில் 10 ‘ஸ்மார்ட்’ நகரங்கள்: சந்திரபாபு நாயுடு தகவல்
Updated on
1 min read

புதிய ஆந்திர மாநிலத்தில் 10 ‘ஸ்மார்ட்’ நகரங்கள் அமைக்கப்படும் என்று அம்மாநிலமுதல்வர் என்.சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். அவர் முதல்வராகப் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக, ஹைதராபாத்தில் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:

புதிய ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகள் அஸ்திவாரத்தில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக மாநிலத் தலைநகர் அமைவதில் அதிக அக்கறை கொண்டுள்ளோம். விஜயவாடா - குண்டூர் மாவட்டங்களுக்கிடையே அரசு நிலங்கள் போதிய அளவு இல்லாத காரணத்தால், தனியாரிடமிருந்து நிலங்கள் பெறப்படும். இதற்கு கைமாறாக, நிலம் வழங்கியவர்களுக்கு 60 சதவீதம் நஷ்டஈடு வழங்குவதுடன், மீதம் உள்ள 40 சதவீதத்தில் இடம் வழங்கப்படும்.

ஒருவேளை இதற்கு தனியார் சம்மதிக்காவிடில், வேறு இடத்தில் தலைநகரம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஹைதராபாத்தை போன்று தலைமைச் செயலகம், சட்டப்பேரவை மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களையும் தலைநகரத்தில் அமைப்பது அவசியம்.

புதிய ஆந்திர மாநிலத்தில் 10 ‘ஸ்மார்ட்’ நகரங்கள் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த 10 நகரங்களும் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களுக்கு ஒரு பாலமாக, அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in