சவுதி சென்றார் பிரதமர் நரேந்திர மோடி

சவுதி சென்றார் பிரதமர் நரேந்திர மோடி
Updated on
1 min read

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் இருந்து நேற்று சவுதி அரேபிய தலைநகர் ரியாத்துக்கு சென்றார்.

மூன்று நாடுகள் பயணமாக கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் இருந்து மோடி புறப்பட்டார். முதல்கட்டமாக பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸுக்கு சென்ற அவர் அங்கு கடந்த 30-ம் தேதி நடந்த இந்திய, ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.

இதைத் தொடர்ந்து பிரஸல்ஸில் இருந்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் சென்ற அவர் அங்கு மார்ச் 31, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் நடந்த அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றார்.

அங்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், கனடா பிரதமர் ஜஸ்டின், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்ட உலகத் தலைவர்களை மோடி சந்தித்துப் பேசினார்.

இரண்டு நாட்கள் அமெரிக்க பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி நேற்று சவுதி அரேபிய தலைநகர் ரியாத்துக்கு சென்றார். அங்கு அந்த நாட்டு மன்னர் சல்மான் உள்ளிட்ட தலைவர்களை இன்று அவர் சந்தித்துப் பேசுகிறார்.

ரியாத்தில் இன்று நடைபெறும் சவுதி தொழிலதிபர்கள், இந்திய தொழிலதிபர்கள் கூட்டுக் கூட்டத்திலும் மோடி உரையாற்றுகிறார். ரியாத் மெட்ரோ ரயில் நிலைய பணிகளை இந்தியாவைச் சேர்ந்த எல் அண்ட் டி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அங்கு சுமார் 1000 இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை மோடி சந்திக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in