Published : 12 Mar 2022 06:59 AM
Last Updated : 12 Mar 2022 06:59 AM

வாக்குப்பதிவு இயந்திரத்தை பைனாகுலரில் கண்காணித்த சமாஜ்வாதி வேட்பாளர் தோல்வி

லக்னோ: உத்தர பிரதேச தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாயின. பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. இந்தத் தேர்தலில் ஹஸ்தினாபூர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளராக போட்டியிட்டவர் யோகேஷ் வர்மா. வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு நடப்பதாக வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக வதந்திகள் பரவின. இதையடுத்து, ஹஸ்தினாபூர் தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மையத்துக்கு யோகேஷ் வர்மா சென்றார்.

அந்த மையத்துக்கு வெளியே தொலைவில் இருந்தபடியே வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைகளை திறந்த காரில் நின்றபடி பைனாகுலர் மூலம் கண்காணித்தார். முறைகேடுகள் நடக்கிறதா என்பதை பைனாகுலர் மூலம் கண்காணிப்பதாகத் தெரிவித்தார். யோகேஷ் வர்மாவின் நடவடிக்கை பத்திரிகைகளிலும், சமூக ஊடகங்களிலும் பரபரப்பு செய்தியானது.

வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்ட யோகேஷ் வர்மா உட்பட யாரும் முறைகேடு புகார் கூறவில்லை. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தினேஷ் கதிக் என்பவரிடம் யோகேஷ் வர்மா 7,312 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x