Published : 11 Mar 2022 04:49 PM
Last Updated : 11 Mar 2022 04:49 PM

இரண்டாவது முறையாக உ.பி. முதல்வர்: யோகிக்கு திலகமிட்டு வாழ்த்திய முலாயம் சிங் பேத்தி .

லக்னோ: உத்தரப்பிரதேச தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அம்மாநில முதல்வராகி இருக்கும் யோகி ஆதித்யநாத்திற்கு சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரான முலாயம் சிங் யாதவின் பேத்தி திலகமிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. இதில், பஞ்சாப் தவிர உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.

குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில், மோடி - யோகி அலையின் காரணமாக பாஜக அறுதிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. யோகி இரண்டாவது முறையாக அம்மாநில முதல்வராகிறார்.

இதற்காக அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரான முலாயம் சிங் யாதவின் பேத்தி, அப்பர்ணா யாதவின் மகள் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு நெற்றியில் திலகமிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, முலாயம் சிங்கின் மருமகளும் பாஜக உறுப்பினருமான அப்பர்ணா யாதவ், தனது ட்விட்டர் பக்கத்தில் 7 நொடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அப்பர்ணாவின் மகள், யோகியின் வெற்றியைப் பாராட்டும் விதமாக அவரது நெற்றியில் வெற்றித் திலமிடுகிறார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டிற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அப்பர்ணா யாதவ், முதல்வரின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். ‘‘தொடர்ந்து, தங்களின் மோசமான செயல்பாடுகளுக்கு வாக்குபதிவு இயந்திரங்களை குறை சொல்ல முடியாது. பாஜக வெற்றிபெற்றுள்ளதற்காக தனது மாமனார் முலாயம் சிங் யாதவிடம் ஆசிகள் பெறுவேன்’’ என்றார்.

அப்பர்ணா யாதவ் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு, சமாஜ்வாதி கட்சியிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x