Published : 10 Mar 2022 09:50 AM
Last Updated : 10 Mar 2022 09:50 AM

வெற்றியை நோக்கி பாஜக; மீண்டும் முதல்வராகிறார் யோகி ஆதித்யநாத்; உ.பி.யில் புதிய சாதனை

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக பெரும் வெற்றி பெரும் நிலையில் உள்ளது. இதுவரை இல்லாத நிலையில் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 2-ம் முறையாக முதல்வர் பதவி ஏற்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கு பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 7-வது கட்டத் தேர்தல் கடந்த 7-ம் தேதி நடந்து முடிந்தது. இதையடுத்து பல்வேறு நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின.

அதன்படி, பாஜக மீண்டும் பெரும்பான்மையுடன் உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியமைக்கும் என பெரும்பான்மையான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்தன. இந்த நிலையில், உ.பி. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக பெரும் வெற்றி பெரும் நிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 203 இடங்களை கடந்து அக்கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம் முதல்வர் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வர் பதவியில் அமரும் சூழல் உள்ளது.

உ.பி.யில் சுதந்திரத்துக்கு பின்பு இதுவரை எந்த ஒரு முதல்வரும் 2-வது முறையாக முதல்வர் பதவியில் அமரவில்லை. இதனை முறியடித்து யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 2-ம் முறையாக முதல்வர் பதவி ஏற்கும் சூழல் உருவாகியுள்ளது.

முக்கிய எதிர்க்கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி அடுத்த இடத்தில் உள்ளது. எனினும் பாஜகவுக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையிலான வித்தியாசம் ஏறக்குறைய பாதியாக உள்ளது. இதனைத் தவிர பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பெரிய அளவில் முன்னிலை பெறவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x