Last Updated : 05 Mar, 2022 11:07 AM

 

Published : 05 Mar 2022 11:07 AM
Last Updated : 05 Mar 2022 11:07 AM

நள்ளிரவில் கங்கைக்கரையில் பிரதமர் மோடி!- தேநீர் அருந்தி, பீடா சுவைத்தது பாஜக வெற்றிக்கு உதவுமா?

புதுடெல்லி: உத்தரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தை வாரணாசியில் முடித்த பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில், கங்கைக்கரையில் அமர்ந்து ஆலோசித்தார். அங்கு தேநீர் அருந்தி, பீடா சுவைத்ததும் அவரது பாஜகவின் வெற்றிக்கு உதவுமா? எனும் கேள்வி எழுந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 10 முதல் துவங்கி ஏழுகட்டங்களாக உ.பி. சட்டப்பேரவைக்கானத் தேர்தல் நடைபெறுகிறது. இதன் கடைசிக்கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் பிப்ரவரி 7 இல் நடைபெற உள்ளது.

இவற்றில், உ.பி.யின் கிழக்குப்பகுதியிலுள்ள 9 மாவட்டங்களின் 54 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இதில், பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதியான வாரணாசியும் முக்கியமாக உள்ளது.

இங்கு தான் பாஜக வெற்றிக்காகப் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி இரண்டு நாள் விஜயமாக நேற்று வந்திருந்தார். இப்பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைய உள்ளது.

நேற்று தனது பிரச்சாரங்களை வாரணாசியின் தெருக்களில் புகுந்து பொதுமக்களை நேரடியாகச் சந்தித்தார் பிரதமர் மோடி. தனது பிரச்சாரத்தை முடித்து தங்குமிடமான பரேகா அரசு தங்கும் விடுதியில் இரவு உணவை முடித்தார்.

பிறகு, திடீர் எனத் தயாராகி மீண்டும் வெளியில் கிளம்பினார் பிரதமர் மோடி. நேராக வாரணாசியின் ராணுவக் குடியிருப்பு பகுதியிலுள்ள ரயில்நிலையத்திற்கு பாதுகாவலர்களுடன் சென்றார் பிரதமர் மோடி.

அவரது வரவை நம்ப முடியாமல் ரயில்நிலையப் பயணிகள் இடையே பெரும் பரபரப்பு உருவானது. அனைவரும் ‘மோடி! மோடி!’ எனக் கோஷங்கள் இட்டு பிரதமரை வரவேற்றனர்.

அங்குள்ள முக்கியப் பயணிகளின் தங்கும் இடத்தை பார்வையிட்டவர், சில ரயில்நிலையப் பணியாளர்களிடம் நின்று பேசினார். பிறகு அங்கிருந்து கங்கையின் கடைசிக் கரையான கிர்கியா காட்டிற்கு வந்து சேர்ந்தார்.

வழியில் பிரதமர் மோடியைப் பார்த்த பொதுமக்கள், ‘ஜெய்ஸ்ரீராம்’ எனக் கோஷமிட்டு உற்சாகமடைந்தனர். மத்திய எரிசக்தித்துறை அமைச்சரும் உ.பி தேர்தல் பொறுப்பாளருமான தர்மேந்திர பிரதானும் அவருடன் இருந்தார்.

இருவரும் புனிதக் கங்கையின் கரையில் அமர்ந்து நீண்டநேரம் ஆலோசனை செய்தனர். இதுபோல், இரவு நேரத்தில் பிரதமர் தன் தொகுதியின் கங்கை கரையில் மர்வது இதுவே முதன்முறை எனவும் கருதப்படுகிறது.

இதில், மத்திய அரசின் பலகோடி ரூபாய் திட்டத்தால் கட்டப்பட்டு வரும் வாரணாசி காரிடர் பணியில் சில மாற்றங்கள் குறித்தும், கங்கையின் அழகை பாதுகாப்புடன் கூட்டுவதன் மீதும் பிரதமர் மோடி பேசியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து தனது இருப்பிடத்திற்கு திரும்பும் வழியிலும் திடீர் என ஒரு தேநீர் கடையில் தம் வாகனத்தை நிறுத்தை உத்தரவிட்டார். அங்கிருந்து கடையில் தேநீருக்காகக் காத்திருந்தவர் அதுவரை அக்கடையின் பணியாளர்களிடம் பேசி மகிழ்ந்தார்.

அடுத்து சில அடி தூரங்களிலிருந்து ஒரு பீடா கடைக்கும் நடந்தே சென்றவர் அதை வாங்கி சுவைத்தார். உ.பி.யின் வாரணாசி வெற்றிலை சுவையான பீடாவிற்கு பெயர் போனது.

தனது அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போன பிரதமர் மோடியின் நேற்றைய நடவடிக்கைகள் பாஜகவிற்கு தேர்தலில் வாக்குகளை பெற்றுத் தரவும் உதவும் என எதிர்நோக்கப்படுகிறது. இப்பகுதியின் பெரும்பாலான தொகுதிகளை 2017 தேர்தலில் கைப்பற்றிய பாஜகவிற்கு பலன்தந்த மோடி அலை இந்தமுறை வீசாமல் ஓய்ந்திருப்பதும் நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x