Published : 05 Mar 2022 07:56 AM
Last Updated : 05 Mar 2022 07:56 AM

உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்பு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு

புதுடெல்லி: உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவ, மாணவியரை மீட்கும் விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று மீண்டும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, போபண்ணா, ஹிமா கோலி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் வேணுகோபால் கூறியதாவது: மனுதாரர் பாத்திமா உட்பட அவருடன் இருந்த அனைத்து மாணவர்களும் உக்ரைன் எல்லையில் இருந்து ருமேனியாவுக்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் வெள்ளிக்கிழமை மாலை ருமேனியாவில் இருந்து விமானத்தில் டெல்லி திரும்புகின்றனர். இதேபோல மற்றொரு மனுதாரர் 250 மாணவர்களை மீட்கக் கோரி மனு தாக்கல் செய்திருக்கிறார். அவர்கள் உக்ரைன் எல்லையை தாண்டி மால்டோவா நாட்டில் நுழைந்துள்ளனர். அவர்களும் விரைவில் இந்தியா அழைத்து வரப்படுவார்கள். இதுவரை 17,000 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். இவ்வாறு அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.

தலைமை நீதிபதி ரமணா கூறும்போது, "உக்ரைன் மீட்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இந்தியர்களை பத்திரமாக மீட்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம். மாணவர்களுக்கு மட்டுமன்றி பெற்றோருக்காகவும் உதவி எண்களை அறிவிக்கலாம்’’ என்று உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x