Last Updated : 03 Mar, 2022 01:32 PM

 

Published : 03 Mar 2022 01:32 PM
Last Updated : 03 Mar 2022 01:32 PM

பங்கரில் பதுங்கினோம்... - கீவ் யுத்தக் களத்தில் இருந்து தப்பி டெல்லி வந்த மாணவர்களிடம் அகலாத அச்சம் | மீட்புப்பணியில் 3 போர் விமானங்கள்

உக்ரைனிலிருந்து இன்று நாடு திரும்பிய இந்திய மாணவர்கள்

புதுடெல்லி: உக்ரைன் தலைநகர் கீவ் போர்க்களத்திலிருந்து தப்பி வந்த இந்திய மாணவர்கள் பலரும் பீதியுணர்வில் உறைந்துள்ளனர். இவர்களை மீட்கும் பணியில் சி-17 குளோப் மாஸ்டர் வகை இந்திய போர் விமானங்கள் மூன்றும் களம் இறக்கப்பட்டுள்ளன.

ரஷ்யா தொடுத்த போரினால் உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்களுக்கும் பாதுகாப்புப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால், பிரதமர் நரேந்திர மோடி உத்தரவின் பேரில் துவக்கப்பட்ட ’ஆப்ரேஷன் கங்கா’ மீட்புப் பணியில் தற்போது போர் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இன்று காலை டெல்லிக்கு அருகிலுள்ள காஜியாபாத்திற்கு இந்த மூன்று போர் விமானங்கள் 750 மாணவர்களுடன் வந்திறங்கின. உத்தரப் பிரதேசத்தில் அமைந்த இந்நகரின் இந்திய விமானப்படையின் கிண்டன் விமான நிலையம் உள்ளது. இம்மூன்று போர் விமானங்களில் தலா இருக்கைகள் 250. இதன் இரண்டில் 15 தமிழக மாணவர்கள், 30 பேர் வந்திறங்கினர். காஜியாபாத்திலிருந்து அனைவரும் டெல்லியின் இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தமிழகம் அனுப்பப்படுகின்றனர்

இவர்களை வழக்கம்போல், தமிழக அரசின் டெல்லி தமிழ்நாடு அரசு இல்லத்தின் அதிகாரிகள் வரவேற்று உபசரித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் போர்க்களங்களாக மாறிய தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் ஆகியவற்றின் தேசிய மருத்துவப் பல்கலைகழகங்களில் பயில்பவர்கள். இவர்கள் அந்த இரண்டு நகரங்களிலும் பங்கர் எனப்படும் பாதாளப் பாதுகாப்பு அறைகளில் பல்வேறு இன்னல்களுக்கும் உள்ளாகி இருந்தனர். இதன் காரணமாக அவர்களுக்கு உக்ரைனில் உருவான பீதியுணர்வு இந்தியா வந்தும் குறையவில்லை.

இது குறித்து 'இந்து தமிழ் திசை' இணையத்திடம் கீவ் தலைநகரின் பங்கரிலிருந்து தப்பிய கோயம்புத்தூர் மாணவி ஒருவர் பேசியபோது, ''பங்கர்களில் எங்களுக்கு பலவகையான சிக்கலை சந்திக்க நேரிட்டது. இதற்கானக் காரணம் எங்களுக்கு முறையாகக் கிடைக்காத உதவிகள் எனலாம். போர் துவங்கிய முதல்நாளான பிப்ரவரி 24-க்கும் முன்பாகவே நாம் பங்கர்களுக்குள் செல்ல வேண்டியதாயிற்று. இங்கிருந்து நாம் தாய் நாடு திரும்புவோமா? இல்லையா? என்ற அச்சம் ஏற்பட்டுவிட்டது. இன்னும் கூட நாம் இந்தியா வந்து விட்டோம் என நம்மால் முழுமையாக உணரவில்லை. எங்களை போல், இன்னும் பல தமிழர் உட்பட இந்திய மாணவர்கள் பலரும் கீவ் நகரின் பங்கர்களில் சிக்கி வெளியேற முடியாமல் உள்ளனர்'' எனத் தெரிவித்தார்.

இன்று, டெல்லியின் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திலும் காலை இரண்டு விமானங்கள் வந்திறங்கின. இவற்றின் முதல் விமானத்தில் ஒருவரும் மற்றும் இரண்டாவதில் நான்கு மாணவர்களும் வந்திறங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் உக்ரைனின் எல்லையிலுள்ள ஐரோப்பாவின் லெவேகியா, ஹங்கேரி மற்றும் ருமேனியாவிலிருந்து நேற்று கிளம்பியவர்கள். இதனிடையே, நேற்று இரவு வந்த இரண்டு விமானங்களில் 2 மற்றும் 4 என ஆறு தமிழக மாணவர்கள் பத்திரமாக டெல்லி வந்திருந்தனர். இவர்கள் ஆறு பேரும் நேற்று நள்ளிரவில் கிளம்பிய சென்னை விமானத்தில் ஏறி தம் வீடுகளுக்கு சென்று விட்டனர்.

நேற்று உக்ரைனிலிருந்து நேரடியாக மும்பைக்கும் மீட்பு விமானங்கல் சென்றிருந்தன. இவற்றில் இந்திய மாணவர்களுடன் தமிழகத்தின் எட்டு பேரும் பத்திரமாக தங்கள் வீடுகளுக்கு கிளம்பிச் சென்றனர். 'ஆப்ரேஷன் கங்கா' மீட்பில் மொத்தம் 46 பயணங்களுக்காக விமானங்கள் இறக்கப்பட்டுள்ளன. இவை ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்பஸ்ஜெட் ஆகியவை முறையே 250, 180, 216 மற்றும் 180 பயணிகள் இருக்கைகள் கொண்டவை. மார்ச் 8ஆம் தேதி வரை செயலில் உள்ளவை விமானப் பயணங்கள் மேலும் நீட்டிக்கும் வாய்ப்புகள் உள்ளன. நேற்று வரை உக்ரைனிலிருந்து வந்த இந்தியர்கள் எண்ணிக்கை சுமார் 7,000.

இன்று மேலும் 1000-க்கும் மேற்பட்டவர்கள் நண்பகல் வரை வந்திறங்கியுள்ளனர். இவர்களில் இதுவரை மீட்கப்பட்ட தமிழக மாணவர்கள் எண்ணிக்கை 225 ஆகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x