Published : 23 Feb 2022 02:00 PM
Last Updated : 23 Feb 2022 02:00 PM

லக்கிம்பூரில் துணை ராணுவத்தினர் சூழ பாதுகாப்புடன் வாக்களித்த அமைச்சர் அஜய் மிஸ்ரா

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பலத்த பாதுகாப்புடன் வந்து வாக்களித்தார். அவரது பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸார், துணை ராணுவப்படையினர் வந்திருந்தனர்.

வாக்களித்துவிட்டு வெளியில் வந்த அஜய் மிஸ்ராவிடம் கேள்விகள் எழுப்ப பத்திரிகையாளர்கள் குவிந்திருந்த நிலையில் எந்தக் கேள்வியையும் எதிர்கொள்ளாமல் வெறும் வெற்றி அடையாளத்தை விரல்களில் காட்டிவிட்டுச் அவர் கிளம்பிச் சென்றார்.

உத்தரப் பிரதேசத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் லக்கிம்பூர் தொகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா சென்ற கார் ஏறி விவசாயிகள் பத்திரிகையாளர் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இந்த சம்பவத்திற்குப் பின்னர் உ.பி.யில் பாஜக விவசாயிகள் ஆதரவை பெருமளவில் இழந்துவிட்டதாகக் கூறப்பட்டது. மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றதும் உ.பி. பஞ்சாப் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு விவசாயிகளை ஆசுவாசப்படுத்தும் முயற்சி என்றே விமர்சிக்கப்பட்டது.

அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா அண்மையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில் லக்கிம்பூர் விவசாயிகள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 59 தொகுதிகளில் லக்கிம்பூர் கேரியும் அடக்கம். இதுதவிர தலைநகர் லக்னோ, இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டதால் சர்ச்சையில் சிக்கிய உன்னாவ் பகுதி, சோனியா காந்தியின் கோட்டையான் ரே பரேலி, பாஜக எம்.பி. வருண் காந்தியின் தொகுதியான பிலிபிட் என பல முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அடுத்ததாக 5,6,7 ஆம் கட்ட தேர்தல்கள் முறையே பிப்ரவரி 27, மார்ச் 3 மற்றும் 7 தேதிகளில் நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x