Published : 21 Feb 2022 09:22 AM
Last Updated : 21 Feb 2022 09:22 AM

இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 16,051: உலகளவில் தொற்று குறைந்தாலும் நெருக்கடியில் ஹாங்காங்

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,051 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்றின் காரணமாக 206 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேர நிலவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது:

* கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,051 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
* இதுவரை கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை: 4,28,28,524.
* கடந்த 24 மணி நேரத்தில் 37,901 பேர் காரோனாவில் இருந்து குணமடைந்தனர்.
* இதுவரை கரோனா பாதித்து குணமடைந்தோர் எண்ணிக்கை:4,21,24,284
* கடந்த 24 மணி நேரத்தில் 206 பேர் உயிரிழந்தனர்.
* கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,12,109.
* இதுவரை நாடு முழுவதும் 175.46 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் கரோனா சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 2,02,131 என்றளவில் உள்ளது.

நாட்டில் அன்றாட தொற்று குறைந்து வரும் நிலையில், கோவா மாநிலத்தில் இன்று முதல் அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்பு தொடங்கியுள்ளது.

ஹாங்காங்கில் கரோனா நெருக்கடி: உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஒமைக்ரான் பரவல் குறைந்து வரும் நிலையில் ஹாங்காங்கில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு மருத்துவமனைகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஹாங்காங் சுகாதார துறை அறிவுறுத்தலின்படி, கரோனா தொற்று லேசான அறிகுறிகளுடன் இருந்தால் கூட அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியது கட்டாயம். இந்நிலையில் அங்கு மருத்துவமனைகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

12,000 பேர் மருத்துவமனையில் அனுமதி பெறுவதற்கு விண்ணப்பித்துக் காத்துள்ளனர். இந்நிலையில் ஒமைக்ரான் நோய் பாதிப்பு டெல்டாவை ஒப்பிடும்போது குறைவு என்பதால், இனி ஹாங்காங்கில் கரோனாவால் பாதிக்கப்படுவோருக்கென புதிய ஹோம் குவாரன்டைன் விதிகள் வகுக்கப்பட்டு விரைவில் அமலுக்குக் கொண்டு வரப்படும் என அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், பூஸ்டர் டோஸ்கள் செலுத்துவதைத் துரிதப்படுத்தியிருந்தால் இந்த நெருக்கடி ஏற்பட்டிருக்காது என்று சுகாதாரத்துறை மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

2 ஆண்டுகளுக்குப் பின்னர் எல்லைகள் திறப்பு: ஆஸ்திரேலிய அரசு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்காக தனது எல்லைகளை இன்று (திங்கள்கிழமை) காலை திறந்துள்ளது. ஆஸ்திரேலிய அரசு தனது குடிமக்கள் அவசியமின்றி வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு கெடுபிடி விதித்திருந்தது. இந்தக் கெடுபிடியால், உலக நாடுகள் ஆஸ்திரேலியாவை ஃபோர்ட்ரஸ் ஆஸ்திரேலியா என்றழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

லிவிங் வித் கோவிட்: பிரிட்டன் அரசு கரோனாவுக்கு எதிரான போரில் புதிய கொள்கையை வகுத்துள்ளது. மக்கள் தொகையில் பெரும்பாலானோருக்கு பூஸ்டர் தடுப்பூசி வரை செலுத்தியுள்ள நிலையில் இனியும் மக்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் கெடுபிடிகளை விதிக்கப்போவதில்லை என பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

இதற்காக லிவிங் வித் கோவிட் “living with COVID” நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது. இனி கரோனா பாதித்தோர் சட்டப்படி தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x