Published : 20 Feb 2022 10:40 AM
Last Updated : 20 Feb 2022 10:40 AM

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு

சண்டிகர்: பஞ்சாபில் இன்று காலை தொடங்கி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

பஞ்சாபில் மொத்தம் 117 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் 1,304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.15 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்காக 24,689 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2,952 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப் பட்டுள்ளது.

காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பல நகரங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். ஜலந்தர் உள்ளிட்ட நகரங்களில் காலை முதலே விறு விறுப்பான வாக்குப்பதிவு காணப்படுகிறது. காலை 9 மணி நேர நிலவரப்படி 8 சதவீத அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன.

மாநிலத்தில் கடந்த ஜனவரி 9-ம் தேதி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அன்று முதல் கடந்த 18-ம் தேதி வரை ரூ.500 கோடி மதிப்பிலான பரிசு பொருட்கள், மதுபானம், ரொக்க பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமீறல் தொடர்பாக 3,467 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பஞ்சாபில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடத்தி வருகிறது. அந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம், பாஜக கூட்டணி, ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவு கிறது.

கடந்த தேர்தலை ஒப்பிடும்போது இந்த முறை ஆளும் காங்கிரஸுக்கு பின்னடைவு ஏற்படக்கூடும் என்று தெரிகிறது. கிராமப்புற பகுதிகளில் ஆம் ஆத்மி அதிக இடங்களைக் கைப்பற்றும். நகரங்களில் பாஜக கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும். சிரோமணி அகாலி தளம் கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பதார் மற்றும் சம்கவுர் சாகிப் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த இரு தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அவருக்கு கடும் சவாலாக உள்ளனர்.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ் ஜோத் சிங் சித்து அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அகாலி தளத்தின் மூத்த தலைவர் பிக்ரம் சிங் மஜிதா களமிறங்கியிருப்பதால் இருவருக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

பஞ்சாப் முன்னாள் முதல்வரும் பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவருமான அமரிந்தர் சிங், பாட்டியாலா தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த முறை காங்கிரஸ் வாக்கு வங்கி அவருக்கு கிடைக்காது என்பதால் அவரது வெற்றி வாய்ப்பு சவாலாகி உள்ளது.

அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், ஜலாலாபாத் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 2012, 2017 தேர்தல்களில் இந்த தொகுதியில் அவர் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பெரோஸிபூர் தொகுதியில் அவர் வெற்றி பெற்றதால் ஜலாலாபாத் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அதே தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கும் காங்கிரஸ் வேட்பாளர் மோகன் சிங்குக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

முன்னாள் முதல்வரும் அகாலி தளத்தின் மூத்த தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் (94), லம்பி தொகுதியில் மீண்டும் களமிறங்கியுள்ளார். வயது முதுமை காரணமாக அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. இந்த தொகுதியில் 4 முனை போட்டி நிலவுகிறது.

ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பகவந்த் மான், தூரி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக, அகாலிதளம் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர் தலில் காங்கிரஸ் 77, ஆம் ஆத்மி 20, அகாலி தளம் 15, பாஜக 3 இடங் களை கைப்பற்றின. தற்போதைய சட்டப் பேரவைத் தேர்தலில் எந்த கட்சி பெரும்பான்மை பெறும் என்பதை கணிக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x