Published : 22 Apr 2016 10:30 AM
Last Updated : 22 Apr 2016 10:30 AM
கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைவர் பினராயி விஜயனுக்கு ஆதரவாக, அவருடன் கருத்து வேறுபாடு கொண்டுள்ள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் நேற்று தீவிர பிரச்சாரம் செய்தார்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களான முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கும் பொலிட்பிரோ உறுப்பினர் பினராயி விஜயனுக்கும் கருத்து வேறுபாடு நிலவுவதாகக் கூறப்படுகிறது. மேலும், “அச்சுதானந்தன் கட்சி விரோத மனப்பான்மை கொண்டவர்” என்று கடந்த 2015-ம் ஆண்டு கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர்.
இப்போது கேரள சட்டப்பேரவை தேர்தல் மே 16-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதுகுறித்து பினராயி விஜயனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கும்போது, “தீர்மானத்தை மாற்றும் வரை அல்லது ரத்து செய்யும் வரை, அச்சுதானந்தனுக்கு எதிராக கட்சி நிறைவேற்றிய தீர்மானம் அப்படியேதான் இருக்கும். அதேசமயம் தீர்மானத்தையும் தேர்தலில் அச்சுதானந்தன் போட்டியிடுவதையும் தொடர்புப் படுத்தி பேசக் கூடாது” என்றார். இதனால் இரு தலைவர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடு முற்றியுள்ளதாக செய்திகள் வெளியாயின.
இந்நிலையில், கன்னூர் மாவட்டத்தில் உள்ள தர்மாதாம் தொகுதியில் பினராயி விஜயன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக சக்கரக்கல் பகுதியில் அச்சுதானந்தன் நேற்று தீவிர பிரச்சாரம் செய்தார். பொதுக் கூட்டத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் அச்சுதானந்தன் பேசியதாவது:
காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியில் ஒரு பெண் அமைச்சரை தவிர, மற்ற எல்லா அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார் உள்ளது. ஆனால், ஊழலற்ற ஆட்சியை வழங்குவோம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. அதை படித்து விட்டு என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பெரிய நகைச்சுவை.
இடதுசாரி கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியை குறைப்போம். தர்மாதாம் தொகுதி வேட்பாளர் பினராயி விஜயனுக்கு நீங்கள் எல்லோரும் வாக்களித்து அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அச்சுதானந்தன் பிரச்சாரம் செய்தார். இந்தக் கூட்டத்தில் விஜயன் பங்கேற்கவில்லை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT