Published : 18 Feb 2022 07:28 AM
Last Updated : 18 Feb 2022 07:28 AM

தனியார் துறைகளில் 75% ஒதுக்கீடு; ஹரியாணா உயர் நீதிமன்ற தடைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

புதுடெல்லி: தனியார் நிறுவனங்களில் 75 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் விஷயத்தில் ஹரியாணா உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க கடந்த2020-ம் ஆண்டு பாஜக மாநில அரசு சட்டம் கொண்டு வந்தது. அதன்படி, ஹரியாணாவைச் சேர்ந்தவர்களுக்கு 75 சதவீத வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்று தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது.

அத்துடன் குறைந்தபட்ச ஊதியமும் ரூ.30 ஆயிரம் அளவுக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்கான அரசாணையை எதிர்த்து, தனியார் நிறுவனங்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஹரியாணா மாநில அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு தடை விதித்தது.

இதையடுத்து, உயர் நீதிமன்ற தடையை எதிர்த்தும், அந்த உத்தரவை ரத்து செய்ய கோரியும் உச்ச நீதிமன்றத்தில் ஹரியாணா அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது:

ஹரியாணாவில் தனியார் நிறு வனங்களில் 75 சதவீத வேலை வழங்க உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு இடைக்கால தடை விதிக்கிறோம். தடை விதித்ததற்கு போதிய காரணங்களை உயர் நீதிமன்றம் தெரிவிக்கவில்லை. மேலும், இதுகுறித்து தனியார் நிறுவனங்கள் மீது மாநில அரசு எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்க கூடாது. மேலும், தனியார் நிறுவனங்களில் 75 சதவீத வேலைவாய்ப்பு குறித்த விவகாரத்தில், ஹரியா ணா உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தி 4 வாரங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும்.

இந்த வழக்கில் விசாரணையை தள்ளிவைக்க சம்பந்தப்பட்ட இருதரப்பினரும் (அரசு - தனியார் நிறுவனங்கள்) நீதிமன்றத்தை நாடக் கூடாது. ஒவ்வொரு முறை விசாரணைக்கு வழக்கு வரும் போதும் இரு தரப்பினரும் ஆஜராக வேண்டும்.

இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஹரியாணா அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துல்ஷார் மேத்தா வாதாடினார்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x