Published : 15 Feb 2022 05:41 PM
Last Updated : 15 Feb 2022 05:41 PM

‘‘நீங்கள் பெரிய போரில் ஈடுபட்டுள்ளீர்கள், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’’- மம்தா அணியில்  இணையும் தேவகவுடா

ஹைதராபாத்: ‘‘வாழ்த்துக்கள், நீங்கள் பெரிய போரில் ஈடுபட்டுள்ளீர்கள், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவை சந்தித்து பேசிய முன்னாள் பிரதமர் எச்.டி.தேவேகவுடா கூறினார்.

மத்தியில் பாஜகவிற்கு மாற்றாக புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பாக தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருடன் அவர் தொடர்ந்து பேசி வருகிறார்.

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவுக்கு பின்னர் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்களை ஒருங்கிணைத்து கூட்டம் ஒன்றை நடத்தவும் மம்தா திட்டமிட்டு வருகிறார். ஆனால், இந்த அணியில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்கு இடமில்லை என்று அவர் ஏற்கெனவே தெளிவுபடுத்தி விட்டார்.

இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி ‘‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளேன்.

பாஜகவுக்கு எதிராக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளை மற்ற எதிர்கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயல்பட அழைப்பு விடுத்தேன். அதனை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

எந்தவொரு மாநிலக் கட்சியுடனும் காங்கிரஸ் இணக்கமாக இல்லை. அக்கட்சி தனக்கான பாதையில் தனித்து செயல்படுவதால், எங்களுக்கான பாதையில் நாங்கள் செல்கிறோம்.

நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைத்து மாநில கட்சிகளும் இதில் ஒன்றிணைய வேண்டும்" என்று மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார்.

இந்தநிலையில் முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சித் தலைவருமான எச்.டி.தேவேகவுடா இன்று தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவை சந்தித்து பேசினார்.

அப்போது ‘‘வாழ்த்துக்கள், நீங்கள் ஒரு பெரிய போரில் ஈடுபட்டுள்ளீர்கள், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், நாம் வகுப்புவாத சக்திகளுடன் போராடி நாட்டைக் காப்பாற்ற வேண்டும்’’ என தேவகவுடா கூறியதாவக தெலங்கானா முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x