லாலு பிரசாத் குற்றவாளி: 5-வது கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தீர்ப்பு

லாலு பிரசாத் குற்றவாளி: 5-வது கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தீர்ப்பு
Updated on
1 min read

ராஞ்சி: 5-வது கால்நடைத் தீவன ஊழல் வழக்கிலும் பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் குற்றவாளி என ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

பிஹார் முதல்வராக லாலு பிரசாத் பதவி வகித்த காலத்தில் கால்நடைகளுக்காக வாங்கப்பட்ட தீவனத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ தரப்பில் 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில் லாலு பிரசாத் மீது மட்டும் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013-ல் லாலு பிரசாத் குற்றவாளி என முதல் வழக்கில் தீர்ப்பளித்தது.

மேலும் ஒரு வழக்கில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வழக்கில் லாலுவிற்கு ஏழு வருடங்கள் சிறை தண்டனை கிடைத்தது. பின்னர் அடுத்தடுத்து 2 வழக்குகளிலும் அவர் தண்டனை பெற்றார். கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான நான்கு வழக்குகளில் ஏற்கெனவே குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு தண்டனை பெற்றதால் சிறையில் அடைக்கப்பட்டார்.

மூன்றரை வருடங்களாக ஜார்கண்டின் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த லாலுவுக்கு சில மாதங்களாக உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. சிகிச்சைக்காக லாலு டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். உடல்நலக் குறைவால் அவருக்கு ஜாமீன் கிடைத்தது.

இந்தநிலையில் கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான மேலும் ஒரு வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

ராஞ்சி தோரந்தா கருவூலத்தில் இருந்து ரூ. 139 கோடி பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் இன்று ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், லாலு பிரசாத் உள்ளிட்ட 75 பேர் குற்றவாளிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான தண்டனை விவரங்களை பிப்ரவரி 18ஆம் தேதி நீதிமன்றம் அறிவிக்கும் என தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in