

புதுடெல்லி: பிஎஸ்எல்வி சி52 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு இந்திய விண்வெளி விஞ்ஞானிகளைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3 செயற்கைக்கோள்களை சுமந்தவாறு பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் இன்று (பிப்.14) காலை விண்ணில் சீறிப் பாய்ந்தது. 2022ல் இஸ்ரோவின் முதல் செயற்கைக்கோளான பிஎஸ்எல்வி சி-52 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
மொத்தம் 1,710 கிலோ எடை கொண்ட ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளான இஓஎஸ்-04 , வேளாண்மை, மண்ணின் ஈரப்பதம், நீர்வளம் போன்றவற்றுக்கு தேவையான உயர்தர வரைபடங்களை அனைத்து காலநிலைகளிலும் எடுத்து அனுப்பக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இது பூமியில் இருந்து 529 கி.மீ. தொலைவில் துருவ சுற்றுப்பாதையில் சுற்றும் வகையில் நிலைநிறுத்தப்பட்டது.
பிஎஸ்எல்வி சி52 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு இந்திய விண்வெளி விஞ்ஞானிகளைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:
“பிஎஸ்எல்வி சி52 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு நமது விண்வெளி விஞ்ஞானிகளுக்குப் பாராட்டுக்கள். வேளாண்மைக்கு, வனங்களுக்கு, தோட்டப் பயிர்களுக்கு அனைத்து வானிலை நிலவரங்களையும், மண்ணின் ஈரப்பதம், நீர் வளம், வெள்ள நிலவரம் ஆகியவற்றின் படங்களை இஓஎஸ்-04 செயற்கைக்கோள் துல்லியமாக வழங்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.