Published : 14 Feb 2022 09:00 AM
Last Updated : 14 Feb 2022 09:00 AM

வாக்களிப்பது தேசிய கடமை: உ.பி. 2ம் கட்ட தேர்தலை ஒட்டி முதல்வர் யோகி வாக்காளர்களுக்கு அழைப்பு- உத்தராகண்ட், கோவாவில் வாக்குப்பதிவு தொடங்கியது

லக்னோ: வாக்களிப்பது தேசிய கடமை. உ.பி.யில் கலவரமற்ற, அச்சமற்ற ஆட்சிக்கு வாக்களியுங்கள் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்தராகண்ட், கோவா சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. உ.பி.யில் 2ஆம் கட்ட தேர்தலும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு கடந்த ஜன.8-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது.

கோவாவில் ஆளுநர் வாக்களிப்பு: 40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. களத்தில், ஆளும் பாஜக,காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ்,ஆம் ஆத்மி, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 301 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 11.6 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

சுயேச்சையாக போட்டியிடும் பாரிக்கர் மகன்: கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கருக்கு பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் கட்சியில் இருந்து விலகிய அவர், தனதுதந்தையின் தொகுதியான பனாஜியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

இன்று காலை பனாஜியில் உள்ள வாக்குச்சாவடியில் ஆய்வு செய்த உத்பல் பாரிக்கர்

22 தொகுதிகளில் வெற்றி உறுதி: வாக்களித்துவிட்டுப் பேசிய கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், இன்று காலை பிரதமர் மோடி என்னை அழைத்து வாழ்த்தினார். கோவாவில் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக மேற்கொண்ட வளர்ச்சித் திட்டங்களால் 22க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி என்று கூறினார்.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு: கோவாவில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆளுநர் பிஎஸ் ஸ்ரீதர் பிள்ளை, அவரது மனைவி ரீத்தா ஸ்ரீதரன் ஆகியோர் டலிகோவா வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் இங்கு அமைதியான முறையில் தங்களின் வாக்குரிமையை செலுத்திவருகின்றனர். இதுதான் நம் ஜனநாயகத்தின் வெற்றி என்று கூறினார். பெருவாரியான மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஸ்திரமான ஆட்சியை நோக்கி: உத்தராகண்டில் 70 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆளும் பாஜக,காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளைச் சேர்ந்த 632 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுமார் 81 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். 11,447 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆட்சியைத் தக்க வைக்க ஆளும் பாஜகவும், மீண்டும் ஆட்சிக்கு வர காங்கிரஸும் போட்டியிடுகின்றன. மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளில் 11 முதல்வர்கள் மாறியுள்ளனர். பாஜக, காங்கிரஸ் என இரண்டு கட்சிகளுமே ஸ்திரத்தன்மையைப் பெறாத நிலையில். இரண்டு கட்சிகளுமே ஆட்சியைக் கைப்பற்றுவது, பின்னர் ஸ்திரமான அரசை அமைப்பது என வியூகங்கள் வகுத்து தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

வாக்களிப்பது தேசிய தர்மம்: 403 தொகுதிகளைக் கொண்டஉத்தரபிரதேசத்தில் முதல்கட்டமாக 58 தொகுதிகளில் கடந்த 10-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.இதைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக சஹாரன்பூர், பிஜ்னோர், மொரதாபாத், சம்பல், ராம்பூர், அம்ரோஹா,படாவுன், பரெய்லி மற்றும் ஷாஜஹான்பூர் ஆகிய 9 மாவட்டங்களுக்குட்பட்ட 55 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம்கான், மாநில அமைச்சர் சுரேஷ் கண்ணா (பாஜக) உட்பட 586 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

உ.பி. தேர்தலில் வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் அமைச்சர் முக்தார் அப்பாஸ் நாக்வி.

இந்நிலையில் 2ஆம் கட்ட தேர்தலை ஒட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத், "அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். வாக்களிப்பது உரிமை, கடமை. வாக்களித்தல் என்பது தேசிய கடமை. எனவே வாக்காளர்கள் மாநிலத்தில் வளர்ச்சியை உறுதி செய்ய வாக்களியுங்கள். கலவரமற்ற, அச்சமற்ற உ.பி.க்காக வாக்களியுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

9 மணிக்கு 9.45% வாக்குப்பதிவு: உத்தரப் பிரதேசத்தில் காலை 9 மணி நிலவரப்படி 9.45% வாக்குப்பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் தேர்தல் அமைதியாக நடைபெறுவதாகவும், எவ்வித அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை என்றும் கூடுதல் தேர்தல் ஆணையர் பி.டி.ராம் திவாரி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வேண்டுகோள்: உத்தராகண்ட், கோவா, உ.பி. 2 ஆம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னதாக அவர் "உத்தராகண்ட், கோவா மற்றும் உ.பி.யின் சில பகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. வாக்களிக்கத் தகுதியானோர் வரலாற்று சிறப்புமிக்க வகையில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவிற்கு வலு சேர்க்க வேண்டுகிறேன்" என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதேபோல் கோவாவில் ஊழலற்ற ஆட்சி அமைய வாக்களிக்குமாறு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோரும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x