Last Updated : 04 Apr, 2016 04:51 PM

 

Published : 04 Apr 2016 04:51 PM
Last Updated : 04 Apr 2016 04:51 PM

பனாமா பேப்பர்ஸ் அம்பலம்- ஒருவரும் தப்ப முடியாது: அருண் ஜேட்லி எச்சரிக்கை

பனாமா பேப்பர்ஸ் அம்பலப்படுத்திய பட்டியலில் உள்ள எவரும் நடவடிக்கையிலிருந்து தப்ப முடியாது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் அரசியல் முக்கியஸ்தர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல் கசிந்துள்ளதையடுத்து பட்டியலில் உள்ள எவரும் நடவடிக்கையிலிருந்து தப்ப முடியாது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

வாஷிங்டன்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கம் (International Consortium of Investigative Journalism) நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 'பனாமா பேப்பர்ஸ்' என்ற தலைப்பில் பல தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பனாமா பேப்பர்ஸ் அம்பலப்படுத்திய விவகாரங்களை வரவேற்றுள்ள நிதியமைச்சர் அருண் ஜேட்லி, “பிரதமரின் ஆலோசனையின் படி, சிபிடீடி, மற்றும் ஆர்பிஐ உட்பட பன்முகமைக் குழு இந்தக் கசிவுகளின் விவரங்களை ஆராய்ந்து அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளும்” என்றார்.

பனாமாவில் இந்திய நடிகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் அடங்கிய சுமார் 500 முக்கியஸ்தர்கள் அடங்கிய ரகசிய பனாமா பேப்பர்ஸ் பட்டியலை உச்ச நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு தீர விசாரிக்கும் என்று அதன் சேர்மன், முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா தெரிவித்துள்ளார்.

கருப்புப் பண விசாரணைக்காக உச்ச நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் துணைத் தலைவர், ஓய்வு பெற்ற நீதிபதி அரிஜித் பசாயத் கூறும்போது, “அமலாக்க இயக்குனரகம், வருமானவரித் துறை மற்றும் வருவாய் உளவு இயக்குனரகம் ஆகியவை இந்த பனாமா பட்டியலை ஆராய்ந்து இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பரிந்துரை செய்துள்ளோம்.

இதன் பின்னணியில் உள்ள உண்மையை தெரிந்துகொள்ள விரும்புகிறோம். சிறப்பு விசாரணைக் குழுவிடம் இந்த பனாமா பேப்பர்ஸ் விவரங்கள் இல்லை. விசாரணை அமைப்புகள் வைத்திருக்கலாம். எனவே இவர்கள் அறிக்கை தாக்கல் செய்த பிறகு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என்றார்.

இந்த ஆவணங்களை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்கள் குழுவில் இந்தியாவின் சார்பில் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தியாளர்களும் இடம் பெற்றிருந்தனர். பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், டி.எல்.எப். உரிமையாளர் கே.பி.சிங், வினோத் அதானி ஆகியோர் பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அருண் ஜேட்லி, பட்டியலில் உள்ளவர்கள் ஒருவரும் தப்ப முடியாது என்று எச்சரித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x