Last Updated : 19 Apr, 2016 07:24 PM

 

Published : 19 Apr 2016 07:24 PM
Last Updated : 19 Apr 2016 07:24 PM

நிதிஷ் பிரதமர் வேட்பாளர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை: லாலு அதிரடி

2019 மக்களவைத் தேர்தலில் நிதிஷ்குமார் பிரதமர் வேட்பாளர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என லாலு பிரசாத் யாதவ் அதிரடியாக கருத்து கூறியுள்ளார்.

இன்று பாட்னாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் எழும்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இதை அவர் தெரிவித்தார்.

இதில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரான லாலுவிடம், 'நிதிஷ்குமாரை பிரதமர் வேட்பாளராக ஏற்பீர்களா?' என கேட்கப்பட்டது. இதற்கு சற்றும் யோசிக்காமல் பதிலளித்த லாலு, 'ஆம்! இதில் யாருக்கு மாற்றுக் கருத்து இல்லை' என தெரிவித்தார்.

பிஹாரில் கடந்த 1990 முதல் லாலு தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சி 15 வருடம் நீடித்தது. அப்போது அவரது முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தனதா தளம் இருந்தது. இதன் தலைவர்களில் ஒருவரான நிதிஷ்குமார், லாலுவின் முக்கிய எதிரியாகக் கருதப்பட்டார். அப்போது நிதிஷ், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினராக இருந்தார்.

இதன் சார்பில் பிஹாரின் முதல் அமைச்சராகவும் இருமுறை இருந்தவர், 2014-ன் மக்களவை தேர்தலில் அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்க மறுத்தார். இதனால், தேஜமுயில் இருந்து வெளியேறியவருக்கு மக்களவை தேர்தலில் படுதோல்வி ஏற்பட்டது.

இதன் பிறகு தன் முக்கிய எதிரியான லாலுவுடன் கைகோர்த்தார் நிதிஷ். இவர்கள் அமைத்த மெகா கூட்டணி, கடந்த வருடம் நடைபெற்ற பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றி அடைந்தது.

இதையடுத்து 2019-ல் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் திட்டமிடப்பட்டு வரும் மூன்றாவது கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ் பேசப்பட்டு வருகிறார். இதை லாலு தனது பதிலில் இன்று அங்கீகாரித்துள்ளார்.

இதன்மூலம், பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் இருந்து லாலு விலகி விட்டார் எனக் கருதப்படுகிறது. இதற்கு முன் மத்திய ரயில்வே துறை அமைச்சராக இருந்த லாலு தான் பிரதமர் பதவிக்கும் தகுதியானவர் எனக் கூறி வந்தது நினைவு கூறத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x