Published : 10 Feb 2022 09:36 AM
Last Updated : 10 Feb 2022 09:36 AM

உ.பி.யில் முதல்கட்டத் தேர்தல் தொடங்கியது: 58 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

லக்னோ: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்கட்டமாக 58 தொகுதிகளில் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்க உள்ளது. உத்தரபிரதேசத்தில் பிப்.10 முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி, முதல்கட்டமாக மேற்கு உ.பி.யில் உள்ள ஷாம்லி, ஹாபூர், கவுதம் புத் நகர், முசாபர்நகர், மீரட், பாக்பத், காஜியாபாத், புலந்த்ஷார், அலிகார், மதுரா மற்றும் ஆக்ரா ஆகிய 11 மாவட்டங்களுக்கு உட்பட்ட 58 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

பல தொகுதிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை நேரத்தில் குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்குச்சாவடிகளில் குவிநந்தனர்.

முதல்கட்ட தேர்தல் நடக்கவுள்ள மேற்கு உ.பி. என்பது ஜாட் சமுதாயத்தினர் அதிகமாக உள்ள பகுதி ஆகும். முதல்கட்ட தேர்தல் நடக்கும் பகுதிகளில் ஆளும் பாஜகவுக்கும் சமாஜ்வாதி-ஆர்எல்டி கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. சில தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் செல்வாக்கு உள்ளது. கடந்த தேர்தலில் இந்த 58 தொகுதிகளில் 53-ல் பாஜக வெற்றி பெற்றது.

இந்த 58 தொகுதிகளிலும் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் சுரேஷ் ராணா, அதுல் கர்க், ஸ்ரீகாந்த் சர்மா, சந்தீப் சிங், அனில் சர்மா, கபில் தேவ் அகர்வால், தினேஷ் காதிக், டாக்டர் ஜி.எஸ்.தர்மேஷ் மற்றும் சவுத்ரி லட்சுமி நரேன் ஆகிய 9 அமைச்சர்களும் அடங்குவர்.

மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்குப் பதிவு மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x