Published : 09 Feb 2022 05:35 PM
Last Updated : 09 Feb 2022 05:35 PM

ஹிஜாப் சர்ச்சைக்கு ஆளும் பாஜகவே காரணம்: அசாதுதீன் ஒவைசி குற்றச்சாட்டு

புதுடெல்லி: "என்னால் தொப்பி அணிந்து நாடாளுமன்றத்திற்குச் செல்ல முடியும் என்றால், ஒரு பெண் ஏன் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்குச் செல்ல முடியாது?" என்று கர்நாடக ஹிஜாப் சர்ச்சை தொடர்பாக ஏ.ஐ.எம்.ஐ.எம் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் (முக்காடு), பருதா (முகத்திரை), புர்கா (முழு நீள உடை) அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால், 6 முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் இறங்கினர். ஹாசன் அரசு கல்லூரிக்கு நேற்று ஹிஜாப் அணிந்துவந்த மாணவியை காவித் துண்டு அணிந்த‌ ஏபிவிபி அமைப்பினர் சூழ்ந்து கொண்டு 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கம் எழுப்பினர். அந்த கூட்டத்துக்கு அஞ்சாமல் மாணவி தனியாளாக 'அல்லாஹ் அக்பர்' என முழக்கம் எழுப்பிய காட்சி உலகளவில் சமூக வலைத்தளங்களின் வாயிலாக வைரலானது.

இந்த விவகாரத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "நான் இந்திய அரசியலமைப்பு பற்றி பேசுகிறேன். இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் பற்றி பேசுகிறேன். என்னால் தொப்பி அணிந்து நாடாளுமன்றத்திற்குச் செல்ல முடியும் என்றால், ஒரு பெண் ஏன் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்குச் செல்ல முடியாது. மதச்சார்பற்ற கட்சிகள் என்று அழைக்கப்படும் கட்சிகள் இதுபோன்றவற்றை கண்டு தங்கள் கண்களையும் காதுகளையும் மூட முடிவு செய்துள்ளன. பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எதுவும் பேசவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக பல்வேறு ஊடகங்களுக்கு ஓவைசி அளித்த பேட்டியில், "நாளுக்கு நாள் வெறுப்பு அரசியல் இந்தியாவில் எப்படி வலுவடைந்து வருகிறது என்பதையே இந்த ஹிஜாப் விவகாரம் காட்டுகிறது. வெறுப்பு அரசியல் கூறுகளை ஆளும் பாஜக ஊக்கப்படுத்துகிறது. இந்தச் சண்டையை ஹிஜாப் அல்லது இஸ்லாமியர்களுடன் இணைக்க வேண்டாம். பள்ளி மாணவிகள் தங்களின் அரசியலமைப்பு உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள். இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணியும் உரிமையை மறுப்பது என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமையை மீறுவதாகும்.

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகள், ஒருவர் என்ன உடை உடுத்த வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்பதை யாரும் தீர்மானிக்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளன. இவை அடிப்படை உரிமை. இந்த சர்ச்சைக்கு ஆளும் பாஜகவே காரணம். இந்தப் பிரச்னையை பாஜகதான் உருவாக்கியுள்ளது. கர்நாடகாவில் பாஜக அரசுதான் ஆளுகிறது. இதற்கு பாஜக பதில் சொல்லியே ஆகவேண்டும். அந்தப் பள்ளியில் படிக்கும் சிறுமிகள் நீண்ட காலமாக ஹிஜாப் அணிந்திருக்கிறார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது. அது அப்படி யாரைத் தொந்தரவு செய்கிறது" என்று பேசியுள்ளார்.

இதேபோல், ஹிஜாப் அணிந்துவந்த மாணவியை காவித் துண்டு அணிந்த‌ மாணவர்கள் சூழ்ந்து கொண்டு 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கம் எழுப்பினர். அந்த கூட்டத்துக்கு அஞ்சாமல் மாணவி தனியாளாக 'அல்லாஹ் அக்பர்' என முழக்கமிட்டது தொடர்பாக பேசிய ஓவைசி, "முஸ்கான் என்ற அந்த மாணவியின் தைரியம் பாராட்டுக்குரியது. முஸ்கானுக்கு பதிலாக அந்த இடத்தில் லட்சுமி என்ற பெயர் கொண்ட மாணவி இருந்திருந்தால் கூட அவரைப் பாராட்டியிருப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x