

தேச நலனுக்காக அறிமுகம் செய்த திட்டங்களை பாராட்டி கடிதம் எழுதிய 10 வயது பள்ளி சிறுமிக்கு, பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நகரத்தை சேர்ந்தவர் அதிதி (10). பள்ளி சிறுமியான இவர், பிரதமர் நரேந்திர மோடி அமல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை பாராட்டி அவருக்கு கடிதம் அனுப்பி வைத்தார். இதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு நன்றி தெரிவித்து பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் சிறுமியின் நேர்மறையான, நம்பிக்கையான கருத்துகள் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமரின் பதில் கடிதம் கண்டு மகிழ்ச்சி அடைந்த அதிதி, ‘‘எனது கடிதத்தை அவர் படித்து பார்த்து பதில் அனுப்புவார் என எதிர்பார்த்திருந்தது பலித்துவிட்டது’’ என்றார்.
பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்கள் நன்றாக இருக்கிறதா? அவர் எப்படி பணியாற்றுகிறார் என அதிதியிடம் கேட்டதற்கு, அவர் ‘‘ஆம் நன்றாக இருக்கிறது’’ என பதில் அளித்துள்ளார்.
மேலும் ‘‘தேசத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பாடுபட வேண்டும். இது தொடர்பாக அவருக்கு நான் தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி கொண்டே இருப்பேன்’’ என்றும் தெரிவித்துள்ளார்.