5 கோடி கோர்ப்வேக்ஸ் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஆர்டர்: வரிவிதிப்புக்கு முந்தைய விலை ரூ.145 ஆக இருக்கும்

5 கோடி கோர்ப்வேக்ஸ் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஆர்டர்: வரிவிதிப்புக்கு முந்தைய விலை ரூ.145 ஆக இருக்கும்

Published on

ஹைதராபாதைச் சேர்ந்த பயலாஜிகல் இ நிறுவனத்தின் கோர்ப்வேக்ஸ் என்ற கரோனா தடுப்பூசியை வாங்க மத்திய அரசு ஆர்டர் செய்துள்ளது. ஒரு டோஸ் ரூ.145 விலையில் (வரியின்றி) 5 கோடி டோஸ் வாங்கப்படும் எனத் தெரிகிறது.

ஆனால் இந்த தடுப்பூசியை எந்த வயது பிரிவினருக்கு அனுமதிக்கலாம் என்பது குறித்து மத்திய அரசு இன்னமும் முடிவு செய்யவில்லை எனத் தெரிகிறது. இருப்பினும் இது தொடர்பான ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சகத்தில் தடுப்பூசி தொடர் பான தொழில்நுட்பக் குழு ஈடுபட்டு வருகிறது.

இப்போது போடப்படும் பூஸ்டர் தடுப்பூசியைப் போல இதை அளிக்கலாம் என பரிந்துரைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக முன்களப் பணியாளர்கள் மற்றும் நீரிழிவு மற்றும் இருதய நோய் உள்ள மூத்த குடிமக்களுக்கு இதை செலுத்தலாம் எனத் தெரிகிறது.

மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் ஹெச்எல்எல் லைஃப் கேர் நிறுவனம் கடந்த ஜனவரி மாத இறுதியில் ஆர்டர் வழங்கியதாகத் தெரிகிறது. ஹைதராபாதைச் சேர்ந்த பயலாஜிகல் இ நிறுவனம் இம்மாதத்தில் மருந்தை சப்ளை செய்யும் எனத் தெரிகிறது. ஒரு டோஸ் மருந்தின் விலை ரூ.145 (ஜிஎஸ்டி வரி தனி) ஆக இருக்கும் எனத்தெரிகிறது.

இதற்கென மத்திய அரசு ரூ.1,500 கோடியை முன்பணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் விடுவித்துள்ளது.

15 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி போடுவது குறித்து என்டிஏஜிஐ பரிந்துரைக்குப் பிறகு மேற்கொள்ளப்படும். அறி வியல் பூர்வமான ஆதாரத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நாடாளு மன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

அவசரகால சூழலில் கோர்ப்வேக்ஸ் தடுப்பூசியை பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ஆர்பிடி புரதம் அடிப்படையில் இது தயாரிக்கப்படுகிறது.

இந்த தடுப்பூசி மருந்தானது வழக்கமான தடுப்பூசியைப் போல தசையில் போடப்படுவதாகும். 28 நாள் இடைவெளியில் இரண்டு டோஸ்கள் போடப்பட வேண்டும். இதை 2 டிகிரி மற்றும் 8 டிகிரி உறைநிலையில் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு குப்பியும் 0.5 மி.லி மற்றும் 5 மி.லி அளவுகளில் வந்துள்ளது.

இந்த தடுப்பூசி மருந்து குறித்து சோதனைகளை இந்நிறுவனம் நடத்தியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in