ஆளுநர் ஜெகதீப் தங்கரை ட்விட்டரில் பிளாக் செய்த மம்தா

ஆளுநர் ஜெகதீப் தங்கரை ட்விட்டரில் பிளாக் செய்த மம்தா
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகம் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் அரசை ஆளுநர் ஜெகதீப் தங்கர் ட்விட்டரில் விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் ஜெகதீப் தங்கர் நேற்று முன்தினம் “ஜனநாயகத்தின் காஸ் சேம்பர் ஆக மேற்கு வங்கம் மாறி வருகிறது. மனித உரிமைகள் நசுக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எத்தகைய அவமானங்களும் எனது கடமையை செய்வதிலிருந்து என்னை தடுக்காது” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று கூறும்போது, “மேற்கு வங்க அரசுக்கு எதிரான ஆளுநர் ஜெகதீப் தங்கரின் ட்விட்டர் பதிவுகளால் மனதளவில் பாதிக்கப்படுகிறேன். எனவே எனது ட்விட்டர் கணக்கில் ஆளுநர் தங்கரை பிளாக் செய்துள்ளேன். மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல் இயக்குநரை ஆளுநர் தங்கர் மிரட்டுகிறார். அவரை திரும்பப்பெற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு பல முறை கடிதம் எழுதிவிட்டேன். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்றார்.

இதனிடையே மாநில விவகாரங்களில் ஆளுநர் தலையீட்டை நாடாளுமன்றத்தில் எழுப்ப திரிணமூல் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆளுநருக்கு எதிராக வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துள்ளதாக திரிணமூல் கட்சி எம்.பி. சுதிப் பந்தோபாத்யாய நேற்று தெரிவித்தார்.

- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in