Published : 31 Jan 2022 10:44 AM
Last Updated : 31 Jan 2022 10:44 AM

நாட்டில் காந்தியக் கொள்கை தேய்கிறது; கோட்சே சித்தாந்தம் மேலோங்குகிறது: மகாத்மாவின் பேரன் துஷார் காந்தி வேதனை

அண்மைக்காலமாக நாட்டில் காந்தியக் கொள்கை தேய்கிறது மாறாக அவரை சுட்டு வீழ்த்திய கோட்சேவின் சித்தாந்தம் மேலோங்குகிறது என்றும் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜெஇஎஸ் கல்லூரியின் காந்தி வாசிப்பு வட்டம் நடத்திய கர் கி தேக்கோ (செய்து பார்) என்ற தலைப்பிலான இணையவழி கருத்தரங்கில் துஷார் காந்தி கலந்து கொண்டார்.

அதில் அவர் பேசியதாவது: அரசாங்கம் விடுதலையின் 75வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் ஆசாதி கா அமிர்த மஹோத்சவத்தைக் கொண்டாடுகிறது. ஆனால் இந்திய வரலாற்றின் அமிர்தம் இன்று நஞ்சாகிவிட்டது. வெறுப்பு மிகுந்து வெறுப்பே பிரச்சாரம் செய்யப்படுகிறது.

மகாத்மா காந்தியின் படிப்பினைகள் மங்கி வருகின்றன. மாறாக அவரைக் கொலை செய்து நாதுராம் கோட்சேவின் சித்தாந்தம் மேலோங்கியுள்ளது. தேசத்தின் ஒரு சாரார் வரலாற்றை சிதைக்கின்றனர். அதை அவர்களின் தேவைக்கேற்ப மாற்றி எழுதுகின்றனர். அதனால் நாம் நமது உண்மையான வரலாற்றை மீட்டெடுக்க வேண்டிய சூழலில் உள்ளோம். வெறுப்புக்கும், பிரிவினைவாதத்துக்கும் எதிராக குரல் கொடுக்க வேண்டியுள்ளோம்.

நாம் இப்போது வன்முறை, வெறுப்பு, பிரிவினைவாதத்தின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். மதம், சாதி, பிராந்திய அடிப்படையில் பிரிந்து கொண்டிருக்கிறோம். தேசம் என்பது வெறும் எல்லைகளால், கொடியால், அல்லது ஒரு வரைபடத்தால் ஆனது அல்ல. ஒரு தேசம் என்பது மனிதர்கள் வாழும் இடம். மக்கள் தான் அந்தத் தேசத்தின் ஆன்மா.

மகாத்மா காந்தி அன்று, தண்டி யாத்திரையைத் தொடங்கியபோது பலரும் புருவங்களை உயர்த்தினர். இது கட்சிக்கு தர்மசங்கடத்தை உருவாக்கும் என்றனர். ஆனால் அனைவருக்கும் காந்தி ஒரே பதிலைச் சொன்னார். செய்து பாருங்கள் என்றார். அவர் தண்டி யாத்திரையில் வெற்றி கண்டார். இன்றும் நாம் செய்து பார்க்க வேண்டிய சூழலில் உள்ளோம். நாம் வெறுப்பு, பிரிவினை, சமுத்துவமின்மைக்கு எதிராக நாம் முடிந்ததை செய்து பார்ப்போம். காந்தியின் கொள்கையைப் பின்பற்றுவதே நாம் அவருக்குச் செய்யும் நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x