Published : 31 Jan 2022 08:46 AM
Last Updated : 31 Jan 2022 08:46 AM

விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டது: மத்திய அரசுக்கு ராகேஷ் டிகைத் கண்டனம்

புதுடெல்லி: விவசாயிகளுக்கு துரோகம் செய்த மத்திய அரசுக்கு பாரதீய கிசான் யூனியன் விவசாய அமைப்பின் தலைவர் ராகேஷ் டிகைத் கண்டனம் தெரிவித்தார்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாய அமைப்பினர் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் முதல் 2021-ம் ஆண்டு நவம்பர் வரை டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தினர். வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவிப்பு செய்ததையடுத்து போராட்டத்தை விவசாயிகள் வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில் ராகேஷ் டிகைத் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது: விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று கடந்த டிசம்பர் 9-ம் தேதி மத்திய அரசு கடிதத்தை எங்களிடம் அளித்தது. ஆனால் உறுதி அளித்தது போல் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு இதுவரை நிறைவேற்றவில்லை.

இதற்காக மத்திய அரசுக்கு விவசாய அமைப்புகள் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் ஜனவரி 31-ம் தேதியை (இன்று) துரோக நாளாக விவசாயிகள் கடைப்பிடிக்கவுள்ளனர். நாடு முழுவதும் இந்தத் தினத்தை விவசாயிகள் கடைப்பிடித்து மத்திய அரசுக்கு கண்டனத்தைத் தெரிவிப்பர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x