Published : 31 Jan 2022 08:39 AM
Last Updated : 31 Jan 2022 08:39 AM

நியோகோவ் வைரஸால் அச்சுறுத்தல் இல்லை: மருத்துவ நிபுணர்கள் தகவல்

புனே: தற்போதைய வடிவத்தில் நியோகோவ் வைரஸால் அச்சுறுத்தல் இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரில் இருந்து 2019-ம் ஆண்டு இறுதியில் கரோனா வைரஸ் தொற்றுஉலகளவில் பரவியது.

கரோனா வைரஸ் தொற்று டெல்டா, பீட்டா, காமா என உருமாற்றம் அடைந்தது. ஆனால், இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா உருமாற்றம் அடைந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்றைவிடஅதிக பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய தாக இருந்தது. மேலும் இது அதிக உயிர்ச்சேதத்தையும் ஏற் படுத்தியது.

டெல்டா அலை ஒருவழியாக ஓய்ந்த நிலையில், ஒமைக்ரான் என்ற வைரஸ் கடந்த நவம்பர் இறுதியில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் டெல்டாவைவிட மிக அதிகளவில் பரவும் தன்மை கொண்டதாக உள்ளது. தற்போது உலகம் முழுவதும் வைரஸ் ஆக்கிரமித்துள்ளது.

வேகமாக பரவினாலும் உயிர்ச்சேதம் அதிக அளவில் இல்லை என்பதால் உலக நாடுகள் நிம்மதியாக இருந்தன. இரண்டு டோஸ்,பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் பாதுகாப்பானவர்கள் என கருதப்படுவதால், பொது முடக்கம் இல்லாமல் உலக நாடுகள் இயக்கி வருகின்றன.

இதையடுத்து உலக சுகாதார அமைப்பு, ஐரோப்பிய யூனியன் நாடுகள் கரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வர இருக்கிறது என கருத்துகளை வெளியிட்டன.

இந்நிலையில்தான் தென் ஆப்பிரிக்காவில் மெர்ஸ்-கோவ்என்ற நியோகோவ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் 3-ல் ஒருவரை கொல்லும் கொடியதன்மை கொண்டது என சீனாவில்உள்ள மருத்துவ ஆராய்ச்சி யாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் அல்ல. திரிபுஅல்லது வவ்வாலிடம் இருந்து பரவிய புது வகையான வைரஸாகஇருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ளன.

ஆனால் தற்போதைய வடிவத்தில் இந்த நியாகோவ் வைரஸால் அச்சுறுத்தல் இருக்காது என்று நமது நாட்டைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில கோவிட்-19 பணிக்குழுவின் உறுப்பினரும், சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் தலைவருமான டாக்டர் சஷாங் கூறியதாவது:

நியோகோவ் என்பது மெர்ஸ்கோவ் உடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு பழைய வைரஸாகும். இது டிபிபி4 ஏற்பிகள் வழியாக செல்களுக்குள் நுழைகிறது. இதில் புதியது என்னவென்றால், நியோகோவ் வவ்வால்களின் ஏஸ்2 ஏற்பிகளைப் பயன்படுத்தலாம், ஆனால் புதிய பிறழ்வு ஏற்படாதவரை அவை மனித ஏஸ்2 ஏற்பிகளை பயன்படுத்த முடியாது. தற்போதைய வடிவத்தில் இந்தவைரஸால் அச்சுறுத்தல் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லியிலுள்ள அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் - இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜீனாமிக்ஸ் அன்ட் இன்டிராகேட்டிவ் பயாலஜி (சிஎஸ்ஐஆர்-ஐஜிஐபி) இன்ஸ்டிடியூட்டின் முதன்மை விஞ்ஞானி வினோத் ஸ்காரியா கூறும்போது, “விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவுவது மிகவும் அரிதான நிகழ்வாகும்.

இந்த வகை வைரஸ், இயற்கையான வடிவத்தில், மனிதர்களை பாதிக்காது. மேலும் இது இன்னும் மனிதர்களை பாதிக்காததால், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. நியாகோவ் என்ற வைரஸ் கூட புதியது அல்ல. இந்த வைரஸ் பல ஆண்டுகளாக மக்களால் அறியப்படுகிறது. நியாகோவ் வைரஸானது மனிதனின் ஏஸ்2 ஏற்பிகளுடன் இயல்பாக பிணைக்க முடியாது. ஆனால் செயற்கை பிறழ்வுகள் பிணைப்பை மேம்படுத்தலாம். இத்தகைய பிறழ்வுகள் இயற்கை யாகவே நியாகோவ் வைரஸில் காணவில்லை. எனவே தற்போ தைய வடிவத்தில் இந்த வைர ஸால் மனிதர்களுக்கு அச்சுறுத்தல் இருக்காது என்றே எண்ண வேண்டியுள்ளது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x