Published : 29 Jan 2022 06:45 AM
Last Updated : 29 Jan 2022 06:45 AM

போலி தரிசன டிக்கெட்டு வழங்கி ஏமாற்றிய ஆட்டோ ஓட்டுநர்

திருமலை: திருப்பதி ஏழுமலையானை ஆன்லைனில் முன்பதிவு செய்த பின்னரே சாதாரண பக்தர்கள் தரிசிக்கும் நடைமுறை உள்ளது. இதனை அறியாமல் பக்தர்கள் பலர் நேரடியாக திருப்பதிக்கு வந்து விடுகின்றனர். அவர்கள், ரயில், பஸ் நிலையம் மற்றும் தங்கும் விடுதிகளின் அருகே சுற்றித் திரியும் இடைத்தரகர்களை அணுகி, தரிசன டிக்கெட்டுக்காக பணத்தை கொடுத்து ஏமாறு கின்றனர்.

கடந்த 27-ம் தேதி புதுச்சேரியை சேர்ந்த சி.சுப்ரமணியம் மற்றும் அவரது நண்பர் 2 பேர் ரூ. 300ஆன்லைன் டிக்கெட்டுடன் வைகுண்ட காம்ப்ளக்ஸுக்குள் சென்றனர். அப்போது டிக்கெட்டை ஸ்கேன் செய்தபோது, அது போலி என்று தெரிய வந்தது. யாருடைய டிக்கெட்டையோ, ஊர், பெயர், ஆதார் எண்ணை மாற்றி இவர்களுக்கு கொடுத்தது தெரிய வந்தது. அதன் பின்னர் சுப்ரமணியத்திடம் விசாரணை நடத்தியதில், தரிசன டிக்கெட் இல்லாமல் வந்ததாகவும், பஸ் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் மவுன குமார் மற்றும் அவரது நண்பர் சவுந்தர் ஆகிய இருவரும் தரிசன டிக்கெட்டு ஏற்பாடு செய்து கொடுத்து ரூ.8,000 பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து திருமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து, அந்த இடைத்தரகர்களை தேடி வருகின்றனர்.

ஏழுமலையானை வரும் பிப்ரவரி மாதத்தில் தரிசனம் செய்ய ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் நேற்று காலை 9 மணிக்கு வெளியிட்டது. தினமும் 12 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் 28 நாட்களுக்கு 3.36 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது. இவற்றை 45 நிமிடங்களில் நாடு முழுவதிலும் உள்ள பக்தர்கள் முன்பதிவு செய்து விட்டனர். ஆயினும் இதனை அறியாத பல பக்தர்கள் தொடர்ந்து பல மணி நேரம் வரை டிக்கெட்டுகளுக்காக ஆன்லைனில் முயற்சி செய்து கொண்டே இருந்தனர். இன்று காலை 9 மணிக்கு சர்வ தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x