Published : 28 Jan 2022 04:13 PM
Last Updated : 28 Jan 2022 04:13 PM

எடியூரப்பா பேத்தியின் உடல், தூக்கில் தொங்கிய நிலையில் பெங்களூரு குடியிருப்பில் மீட்பு

எடியூரப்பாவுடன் மறைந்த சௌந்தர்யாவும் அவரது கணவரும் | கோப்புப் படம்.

பெங்களூரு: முன்னாள் கர்நாடக முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான எடியூரப்பாவின் பேத்தி செளந்தர்யாவின் உடல், அவர் வசிந்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவல்: கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா (30), பெங்களூருவின் எம்.எஸ்.ராமய்யா மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். மவுன்ட் கார்மெல் கல்லூரி அருகில் வசந்த் நகரில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மருத்துவரான தனது கணவரோடு வாழ்ந்துவந்தார். அவருக்கு ஆறு மாத குழந்தை ஒன்றும் இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் சௌந்தர்யாவுக்கு திருமணம் ஆகியுள்ளது.

இன்று காலை சௌந்தர்யா தனது அறைக்கு சென்றவர் நீண்டநேரமாகியும் கதவைத் திறக்காத நிலையில், வீட்டில் பணிபுரிபவர்கள் கதவைத் தட்டியுள்ளனர். பின்னர் அவரது கணவரை தொலைபேசியில் அழைத்துள்ளனர். இந்தத் தகவல் அறிந்த அவரது கணவர் வீட்டுக்கு வருவதற்கு முன்பே தொலைபேசியில் மனைவியை அழைத்துள்ளார். ஆனால் பதில் வரவில்லை.

சுமார் 10 மணியளவில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டறியப்பட்டார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சௌந்தர்யா மரணம் குறித்து அறிந்த அவரது குடும்பத்தினரும், மாநில பாஜகவினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் அவரது அமைச்சர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்க நேரில் சென்றுள்ளனர்.

கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மூத்த மகள் பத்மாவதி, அவருடைய மகள்தான் சௌந்தர்யா ஆவார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x