Last Updated : 28 Jan, 2022 01:05 PM

 

Published : 28 Jan 2022 01:05 PM
Last Updated : 28 Jan 2022 01:05 PM

ராகுல் காந்திக்காக 11 வருடங்களாகக் காலணிகள் அணியாதவர்: பிரதமராகத் தேர்வாகும் வரை வெறுங்காலில் உலவும் இளைஞர்

புதுடெல்லி: ராகுல் காந்தி பிரதமராகத் தேர்வாகும் வரை கடந்த 11 வருடங்களாகக் கால்களில் காலணிகள் இன்றி ஒரு இளைஞர் உலவுகிறார். காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இப்படியும் ஒரு ரசிகரா? எனக் கேட்பவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.

தற்போது நடைபெற்று வரும் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் ஆளும் பஞ்சாபும் இடம் பெற்றுள்ளது. இதன் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 20 இல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதன் பிரச்சாரத்திற்காக நேற்று பஞ்சாபின் அமிர்தசரஸ் வந்திருந்தார் காங்கிரஸின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி. இங்கு தனது கட்சி நிர்வாகிகளுடன் ராகுல் நடத்திய கூட்டத்திற்கு வெளியே ஒரு இளைஞர் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்.

இதற்கு தற்போது பஞ்சாபில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தனது கால்களில் காலணிகளை அணியாமல் இருந்தது காரணமானது. இதன் பிறகு அவரிடம் சிலர் அணுகி பேசிய பின் புரிந்த விவரம் கேட்டவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

பஞ்சாபின் அருகிலுள்ள பிந்த் மாவட்டத்தை சேர்ந்த இந்த 30 வயது இளைஞரின் பெயர் தினேஷ் சர்மா. இவர் சுமார் 11 வருடங்களுக்கு முன், அடுத்து ராகுல் காந்தி பிரதமர் பதவியில் அமரும் வரை காலணிகள் அணிவதில்லை என சபதம் எடுத்துள்ளார்.

இதன்படி, இன்றுவரை காலணி இன்றி வெறும் கால்களில் நடந்து வருகிறார். இத்துடன், ராகுல் செல்லும் முக்கிய கூட்டங்களிலும் தினேஷ் சர்மா, நேரில் சென்று கலந்து கொள்கிறார்.

அமிர்தசரஸ் நிகழ்ச்சிக்குப் பின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவரான ராகுல், இன்று ஜலந்தர் செல்கிறார். இங்கும் நேரில் சென்று வெறும் கால்களுடன் காலணியின்றி அங்குசென்று ஆதரவளிக்க இருப்பதாகவும் தினேஷ் சர்மா கூறியுள்ளார்.

கடந்த 2004 முதல் 2014 வரையில் மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சி இருந்தது. இதற்கு தலைமை வகித்த காங்கிரஸில் முதன்முறையாக கட்சியில் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியிட்டார் ராகுல் காந்தி.

இதில் மிகவும் முக்கியத்துவம் பெற்றவர் ஒரு மத்திய அமைச்சர் பதவியையும் ஏற்க முன்வரவில்லை. இந்த காலகட்டத்தில் அவர் பிரதமராகும் வாய்ப்புகளும் இருப்பதாகக் கருதப்பட்டது.

உ.பி.யின் அமேதி தொகுதி எம்.பியாக தொடர்ந்து நான்கு முறை இருந்தவர், 2019 மக்களவை தேர்தலில் பாஜகவின் ஸ்மிருதி இராணியிடம் தோல்வியுற்றார். அதேசமயம், கேரளாவில் மலபுரத்திலும் இரண்டாவது தொகுதியாகப் போட்டியிட்டதால் மீண்டும் எம்.பி.யானர்.

ஆனால், 2014 இல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வென்று ஆட்சி அமைத்தது. இதன் பிறகு காங்கிரஸிற்கு முறையான தேசியத் தலைவர்களும் அமர்த்த முடியாத நிலை தொடர்வது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x